இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? எப்போது முடிவு தெரியும்?

2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.அதன்பிறகு,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.சசிகலா முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.அதனால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார்.

அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வமும், பழனிச்சாமி சேர்ந்து கொண்டு சசிகலாவையும், டிடிவி. தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு தங்களுக்குள் கைகோத்தனர்.

ஆட்சிக்காலம் வரை ஒன்றாகச் செயல்பட்ட இவர்கள், 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்தனர். 2022 ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்களின் அடிப்படையில் பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பழனிச்சாமி பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றன.

2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேரத்தில் இரட்டை இலைச் சின்னம் பழனிச்சாமி தரப்புக்கு வழங்கப்பட்டது. அப்போது, இரட்டை இலைச் சின்னம் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் என்பது நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக்கூடாது’’ என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி பிறப்பித்த ஒரு உத்தரவில், “சூர்யமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும், அப்போது பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும்” என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதேபோல இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக வா.புகழேந்தி அளித்திருந்த மனுவைப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சூர்யமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிச்சாமி ஆகியோர் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாகவும், டிசம்பர் 23 இல் நேரிலும் ஆஜராகி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்தது.

அதன்படி, பழனிச்சாமி தரப்பில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகமும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.ராஜலட்சுமியும் நேரில் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை மனுக்களாக அளித்துள்ளனர். சூர்யமூர்த்தி தரப்பில் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுக்களை தனக்கு வழங்கினால் மட்டுமே அதற்கேற்ப பதிலளிக்க முடியும் என அவகாசம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறும்போது, ‘‘அதிமுகவில் உறுப்பினராகக்கூட இல்லாத சூர்யமூர்த்தி கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் எதிர்த்து எம்ஜிஆர் மக்கள் கட்சி சார்பில் போட்டியி்ட்டவர். எனவே இரட்டை இலைச் சின்னம் தொடர்பான அவருடைய மனுவை நிராகரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். வாதி, பிரதிவாதிகள் தங்களது தரப்புஆட்சேபங்களை வரும் டிசம்பர் 30 க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதில் ஆட்சேபங்கள் இருந்தால் சனவரி 13 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரான பி.ராஜலட்சுமி கூறும்போது, ‘‘2022 ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டவை அல்ல என்பதாலும் அதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதாலும் தற்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அவர்தான். எனவே இரட்டை இலைச் சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம்” என்றார்.

தேர்தல் ஆணையத்தில் நேற்று தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரான வா.புகழேந்தி அளித்துள்ள மனுவில், ‘‘சாதாரண தொண்டன் கூட அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ற வகையில்தான் அதிமுகவை 1972 அக்டோபர் 17 இல் எம்ஜிஆர் தொடக்கினார். ஆனால் அந்த அடிப்படைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து பழனிச்சாமி தனக்கு சாதகமாகக் கொண்டு வந்துள்ள தீர்மானங்கள் சட்டவிரோதமானவை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக நிலுவையில் உள்ள அசல் உரிமையியல் வழக்குகளில் தான் முடிவு செய்ய முடியும் எனக் கூறியுள்ளது.

ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் இரட்டை இலைச் சின்னத்தை பழனிச்சாமிக்கு ஒதுக்கியது தவறானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அந்தப் பதவிகள் தேர்தல் ஆணைய பதிவேட்டில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. எனவே சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும்வரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இதேபோல கே.சி.பழனிசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், தேர்தல் ஆணையப் படிவங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் பழனிச்சாமி கையெழுத்திட அனுமதிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இதனால், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

சனவரி 13 ஆம் தேதி இந்தச் சிக்கலுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இச் சிக்கலில் சட்டப்படி நடக்காமல் அரசியல் நகர்வுகளுக்கேற்பவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. எனவே, சனவரியில் இறுதி முடிவெடுக்காமல் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதில் மேலும் தாமதம் செய்யும் என்றும் சொல்கிறார்கள்.

என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response