கைதானதும் கை கால் உடைப்பு – காவல்துறை நடவடிக்கை சரியா? தவறா?

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி ஒருவர் அங்கு உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும், மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக நட்பு இருந்து வந்துள்ளது.

டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் இவர்கள் இருவரும் வழக்கம்போல பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். கட்டுமானப் பணி நடந்து வரும் இடத்தின் பின்னால் மறைவான இடத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது, இளைஞர் ஒருவர் மறைவான இடத்தில் இருந்து அவர்களை தனது கைபேசி மூலமாக காணொலி எடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அவர், அந்த கானொலியைக் காண்பித்து, சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாகக் கூறி அவர்களை மிரட்டியுள்ளார். பின்னர், மாணவரைத் தாக்கி விரட்டியுள்ளார். பிறகு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியுள்ளார்.

இதுதொடர்பாக விடுதி அறையில் உள்ள தோழிகள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். வெளியூரில் இருந்த பெற்றோர் உடனடியாக சென்னைக்கு விரைந்தனர். நடந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் பாரதிராஜாவிடம் 24 ஆம் தேதி புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருணுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் நேரடி மேற்பார்வையில், மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்குப் பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி சைபர் க்ரைம் காவல்துறை உதவியுடன் தனிப்படை காவல்துறையினர் துப்புதுலக்கினர். விடுதி மாணவர்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர், கோட்டூர் பகுதி நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அடிக்கடி அத்துமீறி நுழைந்துள்ளார். மாணவ, மாணவிகளை மிரட்டி இதுபோல பலமுறை தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்திலும் ஒரு வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு, 2014 இல் வெளியே வந்துள்ளார். இவர் மீது 13 வழக்குகள் உள்ளன. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஞானசேகரனை 15 நாள் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஞானசேகரன் கைது செய்யப்பட்டதும் அவர் தப்பி ஓட முயன்றதாகவும் அதனால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அண்மைக்காலமாக இதுபோன்ற வழக்குகள் மற்றும் திருட்டு வழிப்பறி வழக்குகளில் கைதாகிறவர்கள் உடனடியாக ஏதாவது காரணத்தின் அடிப்படையில் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்படுகிறது.கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டார்கள் அல்லது தப்பி ஓட முயன்றார்கள் என்கிற காரணம் சொல்லப்படுகிறது.

இது காவல்துறையின் திட்டமிட்ட செயலே என்று சொல்லப்படுகிறது.தொடர்ந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சட்டப்படியான தண்டனைகளை மதிப்பதில்லை.அதனால் இப்படி கை கால்களை உடைத்துவிட்டு விடுவது என்கிற முடிவுக்குக் காவல்துறையினர் வந்துள்ளனர்.

இதனால் இதுபோன்ற குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.ஏனெனில் கைது செய்தால் சிறையில் அடைப்பார்கள் வ்ழக்காடி விடுதலையாகிவிடலாம் என்கிற நம்பிக்கையில் குற்றம் செய்தவர்கள் மத்தியில் இப்போது கை கால்களை அடித்து உடைத்துவிடுகிறார்கள் என்கிற தகவல் பரவியிருப்பதால் குற்றம் செய்ய அஞ்சுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம், காவல்துறை இப்படி சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்ளலாமா? என்கிற விமர்சனங்களும் வருகின்றன.

Leave a Response