அதிமுக உட்கட்சிச் சிக்கல் – செங்கோட்டையன் தெம்பு

கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்…..

உங்கள் ஆதரவாளர்கள் 40 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒருங்கிணைப்புப் பணியை தொடர்வதாகச் சொன்னீர்கள். ஒரு மாதம் ஆகிறதே பணிகள் தொடங்கி இருக்கிறீர்களா?

பொறுத்திருந்து பாருங்கள்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

எதுவும் முடிவு செய்யவில்லை.

தொடர்ந்து உங்கள் ஆதரவாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்களே?

செய்துகொண்டே இருப்பார்கள். எல்லாவற்றிற்கும் விரைவில் நன்மை நடக்கும்.

இணைப்புக்கான எந்த அறிகுறியும் எடப்பாடி தரப்பில் இல்லையே? இபிஎஸ்சிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லையே?

என்னிடம் இருந்தும் எந்த ரியாக்‌ஷனும் இருக்காது. இரு தரப்பிலும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

இந்த அமைதிக்கு என்ன காரணம்?

அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி.

கோபியில் எடப்பாடி வந்தபோது நீங்கள் பங்கேற்கவில்லையே?

அன்று சென்னை சென்றுவிட்டேன். அதனால் பங்கேற்கவில்லை.

வரும் எட்டாம் தேதி எடப்பாடி பழனிச்சாமி கோபி வருகிறார். அந்த கூட்டத்தில் நீங்கள் பங்கேற்பீர்களா?

இந்தப் பகுதிக்கு மறுபடியும் அவர் வருவதாக எனக்கு இதுவரை தகவல் இல்லை.

ஓபிஎஸ்சை சந்திப்பீர்களா?

பொறுத்திருந்து பாருங்கள்.

வழி தெரியாமல் தவிக்கிறாரா செங்கோட்டையன்?

எனக்கு வழிகாட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கிறார்கள். அவர்கள் வழியில் சென்று கொண்டிருக்கின்றேன்

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பேட்டியில், அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி என்று அவர் சொல்லியிருக்கிறார்.இதன்மூலம் அவர் நினைத்தது நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response