தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இந்நிலையில், தில்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்….
வேட்புமனு தாக்கல் வரும் 10 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17. வேட்புமனுக்கள் ஜனவரி 18 ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாள். தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தில்லி தேர்தலில் பண பலம் தடுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். முறையான சோதனைகள் நடத்தப்படும். சமூக ஊடகங்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பொய் செய்திகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தில்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரசு என மும்முனைப் போட்டிக்கு அரசியல் களம் காத்திருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அங்கே கட்சித் தாவல்கள், காரசார வாக்குவாதங்கள் என அரசியல் களம் களை கட்டியுள்ளது. இந்நிலையில் இன்று தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் கடும் குளிருக்கு இடையேயும் அரசியல் களத்தில் அனல் பறக்கும்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது. காங்கிரசுக் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.