மோடிக்குக் கறுப்புக்கொடி – காங்கிரசாருக்கு வீட்டுக்காவல்

மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கறுப்புல் கொடி மற்றும் கறுப்பு பலூன் பறக்கும் விடும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரசு மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், இரஞ்சன் குமார், டில்லி பாபு ஆகியோர் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியத்தை இராயபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும், இரஞ்சன் குமாரை ஆயிரம்விளக்குப் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரசுத் தலைவர் டில்லி பாபுவை எம்கேபி நகரில் உள்ள அவரது வீட்டிலும் வீட்டுக் காவலில் வைத்துள்ளது காவல்துறை.

இதை அறிந்த காங்கிரசார் மாவட்டத் தலைவர்கள் இருவரது வீடுகளுக்கு முன்பும் நேற்று காலை முதல் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இரஞ்சன் குமார் மற்றும் காங்கிரசாரை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அதேபோன்று எம்.எஸ்.திரவியம் மற்றும் அங்கு திரண்டு நின்ற காங்கிரசாரை அவரது அலுவலகத்திலும் அடைத்து வைத்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில்….

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த முயன்ற, தமிழ்நாடு காங்கிரசு எஸ்.சி. துறைத் தலைவர் இரஞ்சன்குமார், வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ். திரவியம், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரசுத் தலைவர் ஜெ.டில்லிபாபு ஆகியோரை காவல் துறையினர் வீட்டுக் காவலில் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காங்கிரசு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரசு தலைவர் மணிகண்டனும் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினரின் அத்துமீறிய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Leave a Response