மாநிலங்களை அழிக்கத் துடிக்கிறது பாஜக – மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி 2 ஆவது மாநில மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது……

கடல்போல் திரண்டிருக்கும் திராவிடப் பட்டாளமே. கொள்கைப் பிடிப்பும், இலட்சிய தாகமும் கொண்ட இலட்சக்கணக்கான தம்பிமார்களான உங்களை வீரபாண்டியார் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் ஒருசேரப் பார்க்கிறபோது, எனக்குப் பெரிய உற்சாகமும், மகிழ்ச்சியும் – ஏன் புத்துணர்ச்சியும் பிறக்கிறது.

தெற்கில் விடியல் பிறந்திருப்பதைப்போல விரைவில், இந்திய நாடு முழுவதும் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இருபது வயது குறைந்தது போன்று புதுத் தெம்பு வருகிறது. திராவிட இயக்கம் தோன்றி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1949 செப்டம்பர் 17 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் திரண்டிருந்த அதே கொள்கை உறுதியையும், இலட்சிய வேட்கையையும் இன்றைக்கு இலட்சக்கணக்கான இளைஞர்களான உங்களிடம் பார்க்கிறபோது, இந்த இயக்கத்தின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த உணர்வை உற்சாகத்தை – எழுச்சியை – ஏற்படுத்தித் தந்திருக்கும், இளைஞரணிச் செயலாளர் உதயநிதியைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதுபோல, அவரின் செயல்கள், கழகப் பணிகள் மக்கள் தொண்டு அமைந்திருக்கிறது. கழகத்திற்கான பணி- மக்களுக்கான பணி இரண்டிலும் எனக்குத் துணையாக மட்டுமல்ல, தூணாக தம்பி உதயநிதி இருக்கிறார். அந்த உழைப்பைப் பார்த்துத்தான் நானும், பொதுச்செயலாளரும், தலைமைக் கழக நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எனக்கு முப்பது வயது இருக்கும்போது தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் இளைஞரணியை உருவாக்கினார்கள். அவர்கள் எங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றியதுபோல என்னுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து, வெற்றிக்கொடி கட்டும் கொள்கைப் படையாக இளைஞரணி செயல்பட்டு வருவதை, இந்த சேலம் மாநாடு, நாட்டுக்கே சொல்லிவிட்டது. “எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது” என்ற நம்பிக்கை ஊட்டும் மாநாடாக இந்த சேலம் இளைஞரணி மாநாடு அமைந்துவிட்டது. இவ்வாறு என்னை நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல வைத்த இளைஞரணிச் செயலாளர், மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் -துணை அமைப்பாளர்கள் என்று ஒட்டுமொத்த இளைஞரணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் -நன்றியும்.

இளைஞரணி, என் தாய்வீடு, என்னை வளர்த்த -என்னை உருவாக்கிய இடம். 1980 முதல் கட்சிக்குள் புது இரத்தம் பாய்ச்சியது, இளைஞரணி. உழைப்பு – உழைப்பு -உழைப்பு என்று தலைவர் கலைஞர் என்னைப் பாராட்டினார். அந்த உழைப்புக்கு இளைஞரணி தம்பிமார்கள் என்னை உற்சாகம் ஊட்டிக்கொண்டே இருப்பார்கள். எப்போதும் நான் சுறு சுறுப்பாக இயங்குவதற்கு இன்னொரு முக்கிய காரணம் -என்னைச் சுற்றி இளைஞர்களே இருந்தார்கள். இளைஞர்களால் உருவான போர்க்கருவிதான் இந்த ஸ்டாலின். நான் மட்டும் அல்ல, ஏராளமான தளபதிகளை உருவாக்கிய ஈடு இணையற்ற அணிதான் இளைஞரணி.

எங்களால் உருவாக்கப்பட்ட பலரும் சட்டமன்ற உறுப்பினர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, மாவட்டச் செயலாளர்களாக உயர்ந்தார்கள். நாளை அத்தகைய பொறுப்புகளுக்கு நீங்களும் வரலாம். வருவீர்கள். வர வேண்டும். 75 ஆண்டுகளாகியும் கழகம் இன்றைக்கும் கம்பீரமாக நிற்கிறது என்றால், அதற்கு நம்முடைய கொள்கை உரம்தான் காரணம். தமிழ்நாட்டின் வளத்திற்கும், நலத்திற்கும் காரணமானவர்கள் நாம். இதற்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அந்த ஆபத்தை உணர்ந்து, தடுப்பதற்காகத்தான் இளைஞரணி மாநாட்டையே, மாநில உரிமை மீட்பு மாநாடாக நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மொழியை அழித்து தமிழ்ப் பண்பாட்டை அழித்து மாநில மதிப்பை அழித்து அதன் மூலமாக தமிழினத்தை அழித்து, நம்மை அடையாளமற்றவர்களாக ஆக்குவதற்குப் பாசிச பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாழ்படுத்திய கட்சி, அ.தி.மு.க. அவர்கள் அழிவு வேலைகள் அனைத்தையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிச்சாமி. இப்போது அவர்கள் ஆடும் ’உள்ளே-வெளியே’ ஆட்டம், பா.ஜ.க போட்டுக் கொடுத்த நாடகம். பழனிச்சாமியின் பகல் வேசத்தை அ.தி.மு.க. தொண்டர்களே நம்பத் தயாராக இல்லை, அதுதான் உண்மை.

பா.ஜ.க – அ.தி.மு.க. இவர்கள் இரண்டு பேரின் படுபாதகச் செயல்களைத் தடுப்பதுதான் நம் முன் இருக்கும் முக்கியக் கடமை. மாநிலங்களுக்குப் போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ – அதை மட்டும் ஒன்றிய அரசு வைத்துக் கொண்டால் போதும். ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்பது கலைஞர் நமக்குக் கற்றுக் கொடுத்த முழக்கம். நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்த முழக்கம் இந்தியாவின் முழக்கமாக மாறப்போகிறது.

அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சியானது, மாநில உரிமைகள் வழங்கும் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தும். தி.மு.க. அரசை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, மாநில அரசு உரிமைகள் என்று நான் சொல்லவில்லை. மாநிலங்களை ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்று எந்தக் கட்சியாக இருந்தாலும் ஏன், பா.ஜ ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டும் என்று, எல்லா மாநிலங்களுக்குமான உரிமையாகத்தான் கேட்கிறோம்.

இங்கு மட்டுமல்ல, அண்மையில் ஒன்றிய பிரதமர் திருச்சிக்கு வந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே இதை சொன்னவன், இந்த ஸ்டாலின். இன்றைக்குப் பிரதமராக இருக்கும் அவர், ஒரு காலத்தில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான். ஆனால், இன்றைக்கு மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியைத்தான் பிரதமராக வந்ததில் இருந்து மோடி செய்துகொண்டு இருக்கிறார். மாநில அதிகாரத்திற்கு உட்பட்டவைகளுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு சட்டங்களை இயற்றுகிறது. எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்வது இல்லை.

எதற்கும் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைக் கேட்பது இல்லை. புதிய கல்விக் கொள்கை, நீட், ஜி.எஸ்.டி என்று இவ்வாறு மாநிலங்களின் கல்வி நிதி அதிகாரத்தை முற்றிலுமாகப் பறித்து விட்டார்கள். ஒன்றிய அரசிற்கு பணம் தரும் கருவியாக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள். மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் காலத்தில்கூட நமக்காக உதவிகள் செய்வது இல்லை. இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ‘சும்மா திருக்குறள் சொன்னால் போதும். பொங்கல் கொண்டாடினால் போதும். அயோத்தியில் கோயில் கட்டினால் போதும். தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப் போடுவார்கள்’ என்று ஏமாற்ற நினைக்கிறார்கள்.

அவர்கள் நம்மை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இது பெரியார் மண். பேரறிஞர் அண்ணாவின் மண். தலைவர் கலைஞரின் மண். நரேந்திர மோடி இரண்டு முறை பிரதமர் ஆகியிருக்கிறார். இரண்டு முறையும் தமிழ்நாட்டு மக்கள் அவர் பிரதமராக வாக்களிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயம் வாக்களிக்கப்போவது இல்லை. இந்த முறை தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவும் செயல்படப் போகிறது. ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால், என்ன செய்கிறார்கள்? கட்சிகளை உடைப்பது. சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பது. ஆளுநர்கள் மூலமாகக் குறுக்கு வழியில் ஆட்சியை நடத்தப் பார்ப்பது. சொல்லப்போனால், பா.ஜ.க விற்கு வேட்டு வைக்க வேற யாரும் வேண்டாம். ஆளுநர்களே போதும். அவர்களே அந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடித்திடுவார்கள்.

நாம் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி அமைக்கும் ஆட்சி, ஒற்றைக்கட்சி ஆட்சியாக இருக்காது. சர்வாதிகார ஆட்சியாகவும் இருக்காது. கூட்டாட்சியாக இருக்கும். மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும். தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யும் ஆட்சியாக இருக்கும். இந்தியாவை அனைத்து வகையிலும் முன்னேற்றும் ஆட்சியாக இருக்கும். அதற்கான பணி நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது. தேர்தல் பணி தொடக்கமாக, சேலம் மாநாட்டுக்கு முன்பே மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டணியைப் பற்றியும் -யார் வேட்பாளர் என்பதையும் தலைமையின் கையில் விட்டுவிடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்று முன்பே நான் சொல்லி இருக்கிறேன். யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள்தான் வேட்பாளர். இது உறுதி.

பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடி முகவர்கள் இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான நிர்வாகிகள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள் நாற்பதும் நமதே. நாடும் நமதே என்று நாளை முதல் புறப்படுங்கள். வருகின்ற மூன்று மாத காலம் நீங்கள் உழைக்கும் உழைப்பில் தான் இந்தியாவின் அடுத்த ஐந்தாண்டு எதிர்காலம் அடங்கி இருக்கிறது. உங்கள் உழைப்பை முழுமையாக வழங்குங்கள்.

நம் அனைவரின் ஒற்றை நோக்கம் இந்தியா கூட்டணியை வெல்ல வைப்பது. இந்தியாவை வெல்வது. இது தான் சேலம் மண்ணில் நின்று இந்த நாட்டுக்கு நாம் சொல்லும் செய்தி. என் உயிரினும் மேலான இளைஞரணி தம்பிமார்களே உதயநிதி மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே எனது மகன்கள் தான். உங்கள் ஒவ்வொருவரையும் எனது மகனாக கழகத்தின் கொள்கை வாரிசுகளாகத்தான் பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் இங்கிருந்தபடியே அரவணைத்து அணைத்துக் கொள்கிறேன். உங்களால் நான் இப்போது லட்சம் பேரின் சக்தியைப் பெற்றுவிட்டேன். சேலத்தில் சூளுரைப்போம். சேர்ந்து எழுவோம். இந்தியா கூட்டணி வெல்லட்டும். அதனை காலம் சொல்லட்டும். நாற்பதும் நமதே-நாடும் நமதே.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Response