எடப்பாடி நயினார் சந்திப்பு – ஆதரவாளர்கள் புலம்பல்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதற்காக அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது.

இந்தக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் அதிரடியாக அறிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக மேலிடம், பிரிந்து சென்றவர்களை கூட்டணிக்குள் மீண்டும் இணைக்க முயற்சி செய்து வருகிறது.

அதே நேரத்தில் அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி போர்க்கொடி தூக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். இதனால், எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனின் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட கட்சிப் பதவிகளைப் பறித்தார். அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் கடந்த வாரம் திடீரென தில்லி சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி மீது சரமாரி புகார்களை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, பாஜக மேலிட அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 16 ஆம் தேதி தில்லி சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

இந்தப் சந்திப்பின்போது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் இல்லாததால், 45 தொகுதிகளை நாம் இழக்க நேரிட்டது. எனவே, அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் தேவையில்லாத குழப்பம் தான் வரும். அவர்கள் என்னை கவிழ்க்கப் பார்ப்பார்கள் என்று புலம்பியுள்ளார்.

இந்தச் சூழலில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக, எடப்பாடியுடன் ஆலோசனை நடத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், எடப்பாடியை, நயினார் நாகேந்திரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, பாஜ மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் துணைத்தலைவர் கே.பி.இராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆலோனையில் பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பது குறித்தும், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடியைச் சந்தித்த பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. பகைவரும் இல்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை சந்திப்பது குறித்து பின்னர் தெரிவிப்பேன்.
அதிமுகவில் சிலர் விலகிச் சென்றதால், தேர்தலில் பின்னடைவு என கூற முடியாது. என்றார்.ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார்களா? என்ற கேள்வியை, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் தான் கூட்டணியில் இருந்து வெளியில் சென்றார்கள். பாஜக் எந்தக் கட்சியின் உள்விவகாரங்களிலும் தலையிடாது

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிடமாட்டோம் என்று கூறிக்கொண்டே சசிகலா,ஓபிஎஸ்,டிடிவி.தினகரன் ஆகியோருடன் இணங்கிப் போகவேண்டும் என்று எடப்பாடியை மிரட்டிக் கொண்டிருக்கிறது என்று எடப்பாடி ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.

Leave a Response