1.32 இலட்சத்தை 88 இலட்சமாக உயர்த்திய டிரம்ப் – இந்திய இளைஞர்கள் கடும்பாதிப்பு

அமெரிக்காவில் தற்காலிகமாகப் பணியாற்றுவோருக்கு எச்1 பி விசா எனும்பெயரிலான அனுமதி வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித்திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும்.

ஓராண்டில் 65,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இந்த விசாவை பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டிக்க முடியும்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் எச்1பி விசாவில் சுமார் 7.50 இலட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது மனைவி, பிள்ளைகள் என சுமார் 6 இலட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக எச்1பி விசா அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் 13.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். இந்த விசாவை பெற்றவர்களில் சுமார் 71 விழுக்காடு பேர் இந்தியர்கள்.

இந்நிலையில், ரூ.1.32 இலட்சமாக உள்ள எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 இலட்சமாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். புதிய கட்டண நடைமுறை செப்டம்பர் 21 ஆம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, எச்1பி விசாவுக்கு ஓராண்டுக்கு ரூ.88 இலட்சம் கட்டணம் செலுத்தவேண்டும். இந்த புதிய நடைமுறையால் இலட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக கணினி மென்பொருள் துறையினர் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.

கட்டணத்தை உயர்த்தியது ஏன் என அதிபர் ட்ரம்ப் கூறியதாவது…

எச்1பி விசா தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பண மோசடிசம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விசா நடைமுறையால் அமெரிக்கர்களுக்கு குறைவான ஊதியமே கிடைக்கிறது. அமெரிக்க குடும்பங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாகவே எச்1 பி விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

இந்தக் கட்டண உயர்வால் இந்திய இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.அந்த விசாவை வாங்க ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும் சூழலில் இந்தக் கட்டண உயர்வு வந்திருக்கிறது என்பதால் கடும் நெருக்கடிக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியிருக்கின்றனர் என்கிறார்கள்.

Leave a Response