அண்ணாமலை தனிக்கட்சி – நயினார் பதிலால் பரபரப்பு

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது….

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை நாடு முழுவதும் மக்கள் வரவேற்றுள்ளனர். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக இராகுல் காந்தி பேசி வருகிறார். காங்கிரசு ஆட்சிக் காலத்தில்தான் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. நாங்கள் வாக்குத் திருட்டு செய்திருந்தால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது.

தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினையில் பாஜகவை விமர்சித்து விஜய் பேசி உள்ளார். திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்றும் அவர் கூறி வருகிறார். அவர் இதுவரை எந்தத் தேர்தலையும் சந்தித்தது இல்லை. இப்போதுதான் வந்திருக்கிறார். வந்தவுடன் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என நினைக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு வாக்களிப்பார்களா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாகத் தகவல் பரவுகிறது. அவர் எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர். இப்போதும் கட்சியில் தான் இருக்கிறார். இதுபோன்ற தகவலை பரப்புவது ஊடகத்தினரா அல்லது திமுகவினரா என தெரியவில்லை. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதை யார் ஒட்டினர் எனத் தெரியவில்லை.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. அதிமுக உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீண்டும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை. திமுக கூட்டணி, கொள்கை அளவிலான கூட்டணி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதி அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான கேள்விகளுக்கு திடமான பதிலளிக்காமல் மழுப்பலாகப் பேசியிருக்கிறார். இதனால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response