
மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக இருக்கிறார்.சிவசேனா உடைத்து தனியாக இயங்கும் ஏக்நாத் ஷிண்டேவும் சரத்பவார் கட்சியை உடைத்து தனியாக இயங்கும் அஜித்பவார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில், மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேரும் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரசுக் கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் மகாராஷ்டிர துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரசுக் கட்சியின் தலைவருமான அஜித் பவார் புறப்பட்டுள்ளார்.
பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்தனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது.
விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திடீரென நிகழ்ந்திருக்கும் இந்த விபத்தால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


