சசிகலா டிடிவி ஓபிஎஸ்ஸை சேர்க்கவேண்டும் – எடப்பாடிக்கு கடிதம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட சசிகலா,டிடிவி.தினகரன்,ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்துவருகிறார்கள். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளிப்படையாக இதைப் பேசியதால் அவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

ஆனாலும் அந்தக் கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.இப்போது, குமரி மாவட்ட அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நிர்வாகிகள் சிலர் கடிதம் அனுப்பி வருகிறார்கள்.

அதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் மீண்டும் இணைக்கா விட்டால் தங்களது கட்சிப் பதவியை தாங்களே பறித்துக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் புத்தளம் பேரூர் அதிமுக செயலாளர் குமரேசன் அனுப்பி உள்ள கடிதத்தில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரின் நீக்கத்தை மறுபரிசீலனை செய்து மூவரையும் கட்சியில் இணைக்க வேண்டும். இவர்கள் மூன்று பேரையும் கட்சியில் இணைக்காவிட்டால் தற்போது பேரூர் செயலாளராக இருக்கும் எனது கட்சிப் பதவியையும் பறித்து விடுங்கள் எனக் கூறி இருக்கிறார்.

இதே போல மேலும் சில நிர்வாகிகளும் மூவரையும் கட்சியில் சேர்க்காவிட்டால் தங்களது பதவிகளை பறித்துக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பி உள்ளதால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Leave a Response