
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, சட்டமன்றத் தேர்தலில் பாஜக 78 இடங்களைப் பெற்று போட்டியிடவேண்டும் என்றும், அதிமுக கூட்டணியை விட, பாஜக கூட்டணிக்கு ஓட்டு சதவீதம் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்த தகவல் வெளியானது.மேலும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி என கூறமாட்டேன் எனவும், பாஜக ஆட்சி அமைப்போம் எனவும் அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலையின் இந்தக் கருத்து, அதிமுக, பாஜக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய ஆதரவாளரான வழக்குரைஞர் மணிகண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அண்ணாமலை திட்டமிட்டே அதிமுக- பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறிவருவதாகவும், பாஜகவில் அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் கடுமையாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் அண்ணாமலைக்கு அதிமுகவினர் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தடை விதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பதவி பறிக்கப்பட்ட ஆத்திரத்தில் எதையாவது கூறிக்கொண்டிருப்பார். தேர்தல்பற்றி முடிவு எடுக்க அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதைத் தெரிந்து கொண்டு இவ்வாறு கூறிவருகிறார். அவருக்குப் பதில் அளித்து அவரை பெரிய நபராக்க வேண்டாம் என எடப்பாடி கூறியுள்ளாராம். இதன் காரணமாகத்தான் அண்ணாமலைக்கு யாரும் பதில் அளிக்கவில்லை.
அதேநேரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அவரது நடவடிக்கை குறித்து அமித்ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அதுவரை அவருக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்து சமரசம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு தடைவிதித்துள்ளார் எனவும் தெரிகிறது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், தலைவர் பதவி பறிக்கப்பட்டதால் அண்ணாமலையால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் பாஜகவில் இருந்து வெளியேற முடிவுசெய்துள்ள நிலையில், அவர்களாகவே கட்சியில் இருந்து நீக்கட்டும் என்ற மனநிலையில் இருக்கிறார். இதற்காகவே அமித்ஷா எச்சரிக்கையையும் மீறி செயல்படுகிறார் என்றனர்.
அதிமுக பாஜக கூட்டணியை உடைக்க அண்ணாமலை முயல்கிறார் என்பதை தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி பழனிச்சாமியும் உணர்ந்திருப்பதால் இருவரும் இணைந்து அண்ணாமலையை பாஜகவை விட்டு நீக்க முயற்சி எடுத்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.இது பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.


