அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது…
அதிமுக தொண்டர்கள், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் பொதுக்குழுவில் திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன் பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகாரம் செய்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலா 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய, வழிமொழிய வேண்டும் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட கட்சி விதிகள், தொண்டர்களின் உரிமைக்கு எதிரானதாக உள்ளன.
மேலும், தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், தனக்கு 70 வயதாகிவிட்டதால் நேரில் ஆஜராக இயலாது என்று பழனிச்சாமி கூறியுள்ளார். வரும் தேர்தல்களிலும் அவருக்கு உடல்நலக் குறைவு காரணமாக பிரச்சாரப் பயணங்களை மேற்கொள்ள இயலாமல் போகலாம். எனவே, பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமனம் செய்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்களை அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, எங்களின் மனுவைப் பரிசீலிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி மாற்றுக்கட்சிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. ஏற்கனவே, நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து கூட ஓய்வு பெறலாம். அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு, தற்போதைய விதிகளின்படி மற்றொரு தலைமையை தேர்வு செய்ய போர் எழும்.
கட்சியின் உறுப்பினர்களுக்கு தற்போது 2024 இல் டிஜிட்டல் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படுகிறது.நான் மற்றும் 24 பேர் எங்களது உறுப்பினர் பதிவைப் புதுப்பித்தோம். ஆனால், எங்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கவில்லை. எடப்பாடி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்ததால் எங்களுக்கு உறுப்பினர் அட்டை மறுக்கப்பட்டுள்ளது. உள்கட்சித் தேர்தல்களில் மோதலைத் தவிர்ப்பதற்காக மற்ற தலைவர்களின் ஆதரவாளர்களின் உறுப்பினர் விண்ணப்பங்களை மாவட்டச் செயலாளர்களும் பரிசீலிக்கவில்லை. அதிமுக தேர்தல் அரசியலில் மிக மோசமான நிலையடைந்து வருகிறது.
2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2021 மற்றும் 2022 இல் உள்ளாட்சித் தேர்தல்களிலும், சமீபத்திய 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் கட்சி தோல்வியைச் சந்தித்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி மொத்தம் 89 இலட்சம் வாக்குகள் தான் பெற்றுள்ளது. இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கும் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட கட்சி விதிகள்படி 3 நபர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும். பொதுச்செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட 79 தலைமைக் கழகப் பதவி வகிப்பவர்களில், தமிழ்நாட்டில் உள்ள 75 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் 3 நபர்களை, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பரிந்துரை செய்யலாம். பிற மாநிலங்களில் அதிமுகவுக்கு மாவட்டச் செயலாளர்கள் பதவி கிடையாது.
ஒரிஜினல் விதிப்படி 5 வருடங்கள் உறுப்பினராக இருந்தாலே பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும். உண்மையான உள்கட்சி ஜனநாயகத்தைக் காக்கவும், அழிவிலிருந்து அதிமுகவைக் காப்பாற்றவும், எடப்பாடியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்த முடிவை மறுபரிசீலனை செய்ய கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அளித்த மனுவை பரிசீலிக்குமாறு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த மனுவில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறக்கூடும் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.