கோவை ஈஷா மையம் சென்ற பெண் மர்மமரணம் – தொடர்புடையோர் அச்சம்

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர் பழனிகுமார். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரது மனைவி சுபஶ்ரீயும் (34) தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ சைலன்ஸ் என்ற யோகா பயிற்சியை ஈசா யோகா மையத்தில் மேற்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மற்றொரு பயிற்சிக்காக 2022 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி கோவை ஈசா யோகா மையத்துக்குச் சென்றுள்ளார். அவரை அவரது கணவர் காலை 6 மணியளவில் அங்கு விட்டுச் சென்றுள்ளார்.

டிசம்பர் 18 ஆம் தேதியுடன் அந்தப்பயிற்சி முடிவடைந்த நிலையில் அவரை அழைத்துச் செல்ல கணவர் பழனிகுமார் ஈசா யோகா மையத்துக்குப் போயுள்ளார்.

அன்று காலை 6 மணிக்கே வந்து காத்திருத்த அவர், 11 மணி ஆகியும் சுபஶ்ரீ வராத நிலையில்,கைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.ஆனால் அவருக்கு அழைப்பு செல்லவில்லை.

அதனால் ஈஷா யோகா மையத்தினரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் சுபஸ்ரீ காலையிலேயே பயிற்சி முடிந்துச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது காலையிலேயே ஈசா யோகா மையத்தின் மற்றொரு வாசல் வழியே வெளியேறிய சுபஶ்ரீ,வாடகை வாகனம் ஒன்றில் ஏறி செம்மேடு பகுதிக்குச் சென்ற தகவல் தெரியவந்ததாம்.

வேறொரு எண்ணில் இருந்து தனக்கு வந்த அழைப்பை பழனிக்குமார் தொடர்பு கொண்டபோது, “என் கணவரிடம் பேச வேண்டும் என பெண் ஒருவர் சொல்லிவிட்டு, அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறி சென்றுவிட்டார்” என அந்த எண்ணில் பேசிய நபர் கூறியுள்ளார் என தகவல் கூறப்படுகின்றது.

இதன் பின்னர் சுபஶ்ரீயை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பழனிக்குமார், மனைவி சுபஶ்ரீ மாயமானது குறித்து ஆலாந்துறை காவல்துறையில் புகார் அளித்தார்.அந்தப் புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை தொடங்கினர்.

பயிற்சியின்போது கையில் செல்போன் மற்றும் உடமைகளுடன் சென்றிருந்த சுபஶ்ரீ, பயிற்சிக்குப் பின் வெளியே வரும்போது கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை நிறை உடை அணிந்து காணப்பட்டார்.
மேலும், அவர் சாலையில் ஓடுவது போல் இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதற்கிடையில், சுபஶ்ரீயை கண்டுபிடிக்க 6 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைககப்பட்டது.

மேலும் அவரது புகைப்படம் அனைத்து பேருந்து நிலையம் மற்றும் தொடர்வண்டி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை செம்மேடு காந்திநகர் அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இறந்தது சுபஸ்ரீ தான் என அவரது கணவர் மோதிரம் மற்றும் ஈசாவின் அடையாளம் அவரது கையில் அணிந்திருந்ததை வைத்து உறுதிபடுத்தினார். சுபஸ்ரீயின் உடலை மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுபஸ்ரீ தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த மையத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதால் அம்மையத்துடன் தொடர்புடையோர் அனைவரும் அச்சத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response