முதலாளிகளைக் கடனாளியாக்கியது மோடி அரசு – மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை, பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, கரூர் தொகுதி காங்கிரசு வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து, இந்தியா கூட்டணி தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் கோவை-கொச்சின் எல் அண்ட் டி பைபாஸ் சாலை செட்டிபாளையம் பகுதியில் நேற்று இரவு நடந்தது.

இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்.

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…..

நம் வெற்றிக்கு மகுடம் வைத்ததுபோல் இந்தியாவின் இளம்தலைவர் இராகுல்காந்தி இங்கு வருகை தந்துள்ளார். நாடு சந்திக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசுக் கட்சியின் கைகளை வலுப்படுத்த திமுக தோளோடு தோள் நிற்கிறது. திமுக எப்போதும், சோதனைக் காலத்தில், காங்கிரசுக் கட்சியுடன் இருக்கும் கூட்டணிக் கட்சி. எப்போதும் வெல்லும் கூட்டணி, நமது கூட்டணி.

அன்னை சோனியாகாந்தி மீதும், இளம் தலைவர் இராகுல்காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாத அன்பும், பாசமும் கொண்டவர்கள். நான், இந்தக் கூட்டத்தின் வாயிலாக அழைப்பு விடுக்கிறேன். ‘‘இராகுல் அவர்களே வருகே, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக’’. இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து உங்களை வரவேற்கிறேன். இராகுல்காந்தியின் நடைபயணத்தை, நான்தான் கன்னியாகுமரியில் இருந்து துவங்கி வைத்தேன்.மும்பையில் நடந்த நிறைவு விழாவிலும் நான் கலந்து கொண்டேன்.

‘‘மக்களிடம் செல்…, மக்களிடமிருந்து கற்றுக்கொள்…’’ என அண்ணா கூறிய வழியில் இராகுல்காந்தி நடைபயணத்தைத் துவக்கினார். மக்களோடு மக்களாக இருந்து, காங்கிரசு தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளார். இந்த தேர்தலின் ஹீரோ, காங்கிரசுக் கட்சியின் தேர்தல் அறிக்கைதான். திமுக தொடர்ந்து வலியுறுத்தும் சமூக நீதி, காங்கிரசுக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த வாக்குறுதிகளை இராகுல்காந்தி நிறைவேற்றுவார்.

நமது பிரதமர் மோடி எப்போதும் வெளிநாட்டில்தான் இருப்பார். ஆனால், இப்போது தேர்தல் வந்துவிட்டதால், அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். அப்படி வருகிற இடத்தில், எங்காவது தனது 10 ஆண்டுகால சாதனை பற்றிப் பேசுகிறாரா? இந்தியா கூட்டணிக் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் வசைபாடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

எங்கு பார்த்தாலும் ஒரே பல்லவியைப் பாடி வருகிறார். ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டினால், அதற்கு வேந்தராக இருக்கக்கூடிய முழு தகுதியும் பிரதமர் மோடிக்கு உள்ளது. இதுபற்றி காங்கிரசு கேட்ட கேள்விக்கு, இதுவரை மோடியிடம் இருந்து பதில் வரவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது யார்? கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துவது யார்? என இராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கும் இதுவரை பதில் வரவில்லை. அதற்குப் பதிலாக, இராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறித்தீர்கள். இப்போது ஊழல் கறை படிந்தவர்களைச் சுத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள். யார் ஊழல்வாதி? கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்… ‘‘யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை…’’ என சொல்வதுபோல் உங்கள் கதை உள்ளது.

10 ஆண்டு கால ஆட்சியில், தமிழ்நாட்டுக்கு என்னென்ன சிறப்புத் திட்டம் கொண்டு வந்தீர்கள்? என உங்களால் எதையும் சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் 10 ஆண்டாக, தமிழ்நாட்டைச் சீரழித்த பழனிச்சாமி. நாங்கள், இந்தியா கூட்டணிதான் ஆளவேண்டும் என்கிறோம். ஆனால், யார் ஆள வேண்டும்? என அதிமுகவினரால் சொல்ல முடியவில்லை. யார் ஆளக்கூடாது? என்றும் அவர்களால் சொல்ல முடியவில்லை. கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடி தரும் களத்துக்கு வந்துள்ளார் பழனிச்சாமி. தன்னைச் சுற்றியுள்ள அத்தனை பேர் முதுகில் குத்தினார் பழனிச்சாமி. பாஜகவை எதிர்த்துப் பேச பழனிச்சாமியால் முடியாது. ஏன்? எனக் கேட்டால், அது, கூட்டணி தர்மம் என்கிறார். இது, சிம்ப்ளி வேஸ்ட்.

நாம் மூன்றே ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகள் செய்துளோம். அதைத்தான் அடையாளமாகக் காட்டி, வாக்குக் கேட்கிறோம். கடுமையான நிதி நெருக்கடியிலும் இவ்வளவு திட்டங்களைத் தருகிறோம். மத்தியில், இந்தியா கூட்டணி அரசு அமைந்தால் இன்னும் பல திட்டங்களைத் தர முடியும். தொழில்வளம் நிறைந்த கோவை மாவட்டத்தை ஒன்றிய பாஜக அரசு நசுக்கிவிட்டது. இரண்டு தாக்குதல் நடத்தி நசுக்கிவிட்டது. ஒன்று – கறுப்புப் பணம் ஒழிப்பு என்கிற பெயரில், ஏழைகளில் சுருக்குப் பையில் இருந்து பணத்தை எடுத்து விட்டார்கள். அடுத்து – ஜி.எஸ்.டி சட்டத்தைக் கொண்டுந்து முதலாளிகளைக் கடனாளிகளாக மாற்றி விட்டனர்.

அண்டை நாடான வங்கதேசத்துடன், ஒன்றிய பாஜக அரசு போட்ட ஒப்பந்தம் காரணமாக, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் முடங்கிக் கிடக்கின்றன. அத்துடன், 35 சதவீத டெக்ஸ்டைல் மில்கள் முடங்கிக் கிடக்கின்றன. இப்படி தொழில்களை முடக்கிவிட்டு, கொங்குப் பகுதி எனக்கு நெருக்கமான பகுதி… என பிரதமர் மோடி கோவை வந்தபோது வடிகட்டிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால் அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சியும் போய்விடும். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பது யார்? என்று மக்களுக்குத் தெரியும்.

இட்லி, பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும் என ஏமாற்றுகிறவர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். இதன்மூலம், பிரதமர் மோடியின் முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்கிவிட்டது. கோவை வேண்டாம், தமிழ்நாடு வேண்டாம் என புறக்கணித்த மோடிக்கு நாம் இப்போது பதில் சொல்வோம். ‘‘வேண்டாம் மோடி… வேண்டாம் மோடி….’’ என ஓங்கி ஒலிப்போம். தெற்கில் இருந்து வரும் இந்த குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழ்நாட்டைப் புறக்கணித்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழர் மீதும், தமிழ் பண்பாடு மீதும் தாக்குதல் நடத்தினால் நமது பதிலடி எப்படி இருக்கும் என்பதை ஏப்ரல் 19 ஆம் தேதி காண்பிக்க வேண்டும். நமக்கு எதிராக அணி வகுத்துள்ள பாஜகவையும், அதிமுகவையும் ஒருசேர வீழ்த்துவோம். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க, உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன், வாருங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Response