செங்கோட்டையன் எடப்பாடி மோதல் தொடருகிறது – ஈரோடு அதிமுக கலக்கம்

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் பலம், பலவீனம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக தொகுதி நிலவரம் குறித்து அறிவதற்காக மூத்த நிர்வாகிகள் தலைமையில் கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்சி ரீதியிலான 82 மாவட்ட நிர்வாகிகளை கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார்.

இந்த நிலையில் அமைப்பு ரீதியிலான இந்த 82 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இருந்தபடி எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

நிர்வாகிகள் அனைவரும் தங்களது மாவட்டத்தில் இருந்தபடியே கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவின் சாதனைகளை எடுத்துரைக்கும் வண்ணம் அனைத்து மாவட்டங்களில் இருக்கும் நிர்வாகிகள் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூத் கமிட்டியை விரைவாக அமைத்து அந்தப் பட்டியலை தலைமைக்கு அனுப்ப வேண்டும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் முன்னிறுத்தி விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி,தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது. கூட்டணி குறித்த முடிவை தலைமை எடுக்கும் எனவே, மாவட்ட நிர்வாகிகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாகச் செய்யுங்கள். நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. கூட்டணி விவகாரம் குறித்து யாருடனும் விவாதிக்கக்கூடாது என அவர் பேசியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழ்ந்து வருகிறது. கோபி எஸ்.பி. நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களான முன்னாள் பாமஉக்கள் சத்தியபாமா, காளியப்பன், முன்னாள் சமஉக்கள் எஸ்.எஸ்.ரமணிதரன், ஈஸ்வரன் உள்ளிட்டோருடன் பங்கேற்றார்.

கடந்த வாரம் அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பி பிரச்னையை ஏற்படுத்திய பிரவீன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் கூட்டத்தில் பங்கேற்க ஈரோடு புறநகர் அதிமுக சார்பில் மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் 87 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் வாயிலில் ஒட்டப்பட்டு, அதில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறப்பட்டு அவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.மற்ற நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல் கூட்டத்தில் கலந்து கொண்ட தொகுதி பார்வையாளர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட அனைவரும் கூட்ட அரங்கிற்குள் கைபேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு எடப்பாடியும்,செங்கோட்டையனும் பேச உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புடன் நிர்வாகிகள் காத்திருந்தனர்.

ஆனால், மற்ற மாவட்டங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் தலைமையிலான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் பேசவில்லை.எடப்பாடி பேசியதை மட்டும் இங்குள்ள நிர்வாகிகள் கேட்டுள்ளனர். கூட்டம் முடிந்தபோது செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஒரு மாதமாக இருவருக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு சரியாகி விடும் என எதிர்பார்த்திருந்தனர்.ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையனிடம் பேசுவதை எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்ததால் இருவருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளதாகவே கூறப்படுகிறது.

இது ஈரோடு அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response