தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் போட்டி – இறுதிப்பட்டியல் வெளியானது

18 ஆவது மக்களவைத் தேர்தல்,ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. மார்ச் 27 ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் சார்பில் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மார்ச் 28 ஆம் தேதி காலை 11 மணி முதல் 39 தொகுதிகளிலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. கோவை, வடசென்னை, சேலம் உள்ளிட்ட சில தொகுதிகளில் பிரதான கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீது ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட்டு பரிசீலனை சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

இதனிடையே வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி நிறைவாக 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 135 பேர் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர்.

பின்னர் அந்தந்த தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஈரோடு தொகுதியில் அதிகபட்சமாக 16 பேர் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண்கள் போட்டியிடுகின்றனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை.

பின்னர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் கோரிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஒரே சின்னத்தை பலர் கேட்ட பகுதிகளில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் தனக்கு பானை சின்னம் ஒதுக்குமாறு, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் கோரி இருந்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது. அப்போது, பானை சின்னத்தை வேறு எந்த வேட்பாளரும் கேட்காததால் விசிகவுக்கு அவர்கள் கோரிய சின்னமே ஒதுக்கப்பட்டது. இதேபோன்று விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் இரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இருந்தார். தேர்தல் ஆணையம் மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் தீப்பெட்டி அல்லது காஸ் சிலிண்டர் சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு துரை வைகோ கோரியிருந்தார். அதன்படி நேற்று துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மா.பிரதீப்குமார் ஒதுக்கினார்.

Leave a Response