கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுக்கவே விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் தற்கொலைகளும் அதிர்ச்சி மரணங்களும் நிகழ்ந்தன. இக்கொடிய நிகழ்வுகள், ’கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படமாகிறது.
இந்த ஆவணப்படத்தை முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றிய பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் சுமார் 50 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாகியுள்ளது. பலியான விவசாயிகளின் குடும்பங்களில் சிலவற்றை நேரிலேயே சந்தித்து அவர்களைப் பற்றிய விபரங்களுடன் அவர்களது பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளின் பலிக்கு என்ன காரணம், எப்படி நிகழ்ந்தது என்பதெல்லாம் விரிவாக விவரிக்கப்பட்டு அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறது கொலை விளையும் நிலம் ஆவணப்படம்.
இந்த ஆவணப்படத்தில் ஒரு பாடலும் இடம்பெற்றிருக்கிறது. ’அம்மண அம்மண தேசத்துல…’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை எழுதியிருப்பவர் தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகன். பாடலுக்கு இசை ஜிவி.பிரகாஷ். ஆவணப்படத்தில் குரல் கொடுத்திருப்பவர் சமுத்திரக்கனி. படத்துக்கு பின்னணி இசையமைத்திருப்பது மெட்ரோ, உரு படங்களின் இசையமைப்பாளர் ஜோஹன்.
தமிழ்நாடு முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை உருவாக்கி வந்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் கார்த்திக் குமார். படத்தொகுப்பை ராஜேஷ் கண்ணனும் ரமேஷ் யுவியும் செய்திருக்கிறார்கள். எஸ். கவிதா இணை தயாரிப்பு மேற்கொள்ள படத்தை தயாரித்திருக்கிறார் நா. சதக்கத்துல்லா.
விரைவில் படத்தைத் திரையிடவிருக்கிறார்கள்.