
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின்போது, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரட்டை இலக்க தொகுதிகளைப் பெற தீவிர முயற்சி மேற்கொண்டன. எனினும், இழுபறிக்குப் பின்னர் இரு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதற்கு அப்போதே அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 5 இடங்களில், தளி தொகுதியில் இராமச்சந்திரனும், திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்துவும் வெற்றி பெற்றனர்.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்மநாபபுரம் தொகுதியில் ஆர்.செல்லசாமியும், கீழ்வேளூரில் லதாவும் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதன்மூலம் இரு பொதுவுடமைக் கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளன.
திமுக கூட்டணியில் 8 தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காட்டுமன்னார் கோயில் (ஜோதி மணி) மற்றும் திண்டிவனம் (வன்னியரசு) ஆகிய 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவோ, பிரேமலதா விஜயகாந்த் (விருத்தாசலம்) பெற்ற வெற்றியின் மூலம் ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக் கட்சி,மயிலாடுதுறை,மேலூர்,குளச்சல்,விளவங்கோடு,கிள்ளியூர்
ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.அக்கட்சி மொத்தம் 16,61,312 வாக்குகள் பெற்று 3.37 விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சி என்கிற இடத்தைப் பிடித்திருக்கிறது.


