தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கு ரூ 1000 உதவித்தொகை நீட்டிப்பு

அரசுப் பள்ளி மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 49,664 பேர் பயன்பெறுவர்.

இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரி சேரும் போது ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படும்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது….

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் அத்திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கை உரையின்போது நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சமூகநலத் துறை ஆணையர் அரசுக்கு அனுப்பிய கருத்துரையில், தற்போது இத்திட்டத்தால் 2 இலட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்தால் அவர்களின் மேற்படிப்பைத் தொடர்ந்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை விகிதாச்சாரம் மேலும் அதிகரிக்கும்.

தற்போது சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் 23,560 மாணவிகள் உள்பட அரசு உதவி பெறும் பள்ளிகளில் 49,664 மாணவிகள் மேல்நிலைக்கல்வி பயின்று வருகின்றனர். இத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டில், உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிப்பதற்கு கூடுதலாக ரூ.35.37 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அக்கோரிக்கையை ஏற்று ‘புதுமைப் பெண்’ திட்டத்தை 2024-2025 ஆம் கல்வி ஆண்டு முதல்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்து, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response