வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி புறக்கணிக்கப் போவதாகச் செய்தி வெளியானது.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்….
வருகின்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற மக்களவைத் தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது விருப்பம். இதனை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்.
இதனைத் தொடர்ந்து ‘இரட்டை சிலை’ சின்னத்தைப் பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவினைத் தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பாஜகவை எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் பாஜகவை ஆதரிக்கிறார்.இதனால் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இரட்டை இலையைத் தங்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையிலேயே ஓ.பன்னீர்செல்வம் இப்படிக் கூறியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.