தமிழ்க்கடவுள் முருகன் – அமைச்சர் சேகர்பாபு பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 21 அன்று நடந்த கேள்வி நேரத்தின்போது, மேட்டூர், பாபநாசம், திருவள்ளூர், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாகிருல்லா, திருவலஞ்சுழி வெள்ளவிநாயகர் கோயிலுக்கு புதிய தேர் வடிவமைப்பதற்கும், சிதலமடைந்து இருக்கின்ற தேர் மண்டபத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கும் பதிலளித்துப் பேசினார் அமைச்சர் சேகர்பாபு.

அப்போது அவர் கூறியதாவது….

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு அவர் சேர்த்திருக்கின்ற பெருமையைக் கூற விரும்புகிறேன். திருச்செந்தூர் திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் அளவுக்கு திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.மறைந்த முதலமைச்சர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் 2010 ஆம் ஆண்டு பழனியில் ரூ.58 கோடி மதிப்பிலான 58 ஏக்கர் நிலப்பரப்பு பக்தர்களின் நலன்கருதி எதிர்காலச் சேவைக்குக் கையகப்படுத்துவதற்குப் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்குச் செயல் வடிவம் தந்த ஆட்சி திமுக ஆட்சி.

திருப்பரங்குன்றம் மற்றும் திருநீர்மலை திருக்கோயில்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலேயே சுமார் 26 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தந்ததும் இந்த ஆட்சிதான்.

அறுபடை வீடுகளுக்கு ஒரே நேரத்தில் சென்று சாமி தரிசனம் செய்ய விரும்பிய வயது முதிர்ந்த பக்தர்களின் ஏக்கத்தை அறிந்த முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு புரட்சியாக அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட 1,000 பக்தர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவிட்டு அதற்குண்டான நிதி ரூ.1.58 கோடியை அரசின் சார்பில் வழங்கினார்.

அதன்படி முதற்கட்டமாக 207 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டாம் கட்டமாக மார்ச் 7 ஆம் தேதி 200 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியாகும்.சட்டமன்ற உறுப்பினர் ஜவாகிருல்லா கோரிய வெள்ளைவிநாயகர் திருக்கோயில் திருப்பணிக்கு ரூ.4.55 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் உருவாக்குவதற்கும், தேர் மண்டபத்தினைச் சீரமைப்பதற்கும் சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Leave a Response