ஆளுநர் எங்கு போனாலும் கறுப்புக்கொடி – சிபிஎம் அதிரடி

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘காரல் மார்க்சின் சிந்தனைகள் இந்தியாவைச் சிதைத்தது’ என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து, சென்னை சைதாப்பேட்டையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது………

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘இளையோருக்கு மார்க்ஸ் கதை’ என்ற புத்தகத்தை அனுப்பி வைக்கிறோம். இதை படித்த பிறகாவது காரல மார்க்ஸை பற்றியும், மார்க்ஸ் சிந்தனைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆர்.என்.ரவி, ஆளுநராக இருக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். மார்க்ஸை பற்றி விமர்சிக்கும் தகுதி ஆர்.என்.ரவிக்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.

தமிழகத்தின் எந்த மூலைக்கு ஆர்.என்.ரவி போனாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள், தோழர்கள், மார்க்சிய சிந்தனையாளர்கள், இடதுசாரிகள் அவருக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Response