
17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2026 ஜூன் 18 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
முதல்நாளில் ஆளுநர் உரை நடைபெற்ற நிலையில்,ஜூன் 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடைபெற்றது.
இந்தநிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…..
முதலமைச்சர் அவர்களுக்கு,திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக, எங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தப் புதியஆட்சி அமைந்து,சரியாக 40 நாட்கள் கடந்துள்ளன.ஆளுநர் உரையின்போது,நானும் எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த 40 நாட்களில் இந்த அரசு என்னென்ன செய்திருக்கிறது,ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்களா? ஏதாவது சாதனைகள் செய்திருக்கிறார்களா? என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தோம்.ஆனால்,எங்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.அப்படி எதுவும் ஆளுநர் உரையில்,எங்கள் கண்களுக்குப் படவில்லை,எங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது,நான் பேசும்போது குறிப்பிட்டுப் பேசினேன்.ஆளுநர் வருவார்,அவர் பேசும்போது, `தமிழ்த்தாய் வாழ்த்து’க்கு முதலிடம் கொடுங்கள்’ என்று சொன்னேன்.அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தும் முதலில் பாடப்பட்டது.உடனடியாக, தேசியகீதமும் பாடப்பட்டது.தமிழ்த்தாய் வாழ்த்து ஒருமுறையும்,தேசியகீதம் இரண்டுமுறையும் பாடப்பட்டது.வழக்கு மீறல் நடந்திருக்கிறது.இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபை மீறி, இரண்டுமுறை தேசியகீதம் பாடப்பட்டிருக்கிறது.
இதே கோரிக்கையை,இதற்கு முன்பு இருந்த ஆளுநர் எங்கள் ஆட்சிக்காலத்தில் வைத்திருந்தார்.ஆனால்,எங்கள் தலைவர் அப்பொழுது மிக உறுதியாக இருந்து,இந்த அவையின் இறையாண்மையை நாங்கள் பாதுகாத்திருக்கிறோம்.பதவியேற்புதான் ஆளுநர் மாளிகையில் நடந்தது.அங்கு அவர் கேட்டுக்கொண்டபடி,தேசியகீதம்,வந்தே மாதரம் எல்லாம் பாடினார்கள்.இப்பொழுது ஆளுநர் உரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்,சட்டமன்ற உறுப்பினர்கள் பணிசெய்கின்ற இந்தச் சட்டமன்றத்தில்தான் வாசிக்கப்பட்டிருக்கிறது.இது நம் டெரிட்டடிரி (Territory).நம் டெரிட்டடிரியை ஆளுநரிடம் கொடுக்கின்ற அளவுக்கு என்ன சமரசம் (Compromise) நடந்தது என்று மக்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பேரவைத் தலைவர் அவர்களே,நாங்கள் கேட்டுக்கொண்டபடி`தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் பாடிவிட்டீர்கள். பொதுவாக,இந்தஅவையில் இருக்கின்ற மரபு,கடந்த ஆட்சிக்காலங்களில்,தமிழ்த்தாய் வாழ்த்து ஒருமுறையும், நிகழ்ச்சி முடிந்தபிறகு தேசியகீதம் ஒருமுறையும் பாடப்பட்டுதான் நிகழ்ச்சிகள் முடியும்.ஆனால்,இந்தமுறை நாங்கள் கேட்பது,ஏன் இரண்டுமுறை தேசியகீதம் பாடப்பட்டது என்பது மட்டும்தான் எங்களின் கேள்வி.
தமிழ்த்தாய் வாழ்த்தையும் இரண்டுமுறை நீங்கள் பாடச்சொல்லி,உங்களின் ஆளுநரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கலாம்.அதை இங்கு பேசும்போது,உறுப்பினர்கள் எல்லாம் ஆளுநர் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லி,ஆளுநரைவிட நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.தமிழ்த்தாய் வாழ்த்தை நாங்கள், ஆளுநர் முன்பு பாடிக்காட்டிவிட்டோம் என்று பெருமைபொங்கி இங்கு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தமிழ்த்தாய் வாழ்த்தைவிட,ஆளுநர்தான் உங்களுக்கு முக்கியம் என்கிற எண்ணம் எங்களுக்கும் ஏற்படுகிறது,மக்களுக்கும் ஏற்படுகிறது.
பேரவைத் தலைவைர் அவர்களே,மீண்டும் அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.தமிழ்த்தாய் வாழ்த்து ஒருமுறை பாடிவிட்டீர்கள்,அதற்கு வாழ்த்துகள்.ஏன் தேசியகீதம் இரண்டுமுறை பாடப்பட்டது? அப்போது ஆளுநர் அவர்களுக்கு நீங்கள் கோரிக்கை வைத்திருக்கலாமே? நீங்கள் தேசியகீதம் இரண்டுமுறை பாடப்படவேண்டும் என்றால்,நாங்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டுமுறை இல்லை,மூன்றுமுறை பாடுவோம் என்று சொல்லி,அதை நீங்கள் செய்து காட்டியிருக்க வேண்டும்.அதைத்தான் நான் கேட்கிறேன்? உங்களுக்கு ஆளுநர் முக்கியமா? தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா? என்று இந்த அரசிடம் நான் கேட்க விரும்புகிறேன்.
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.அவரை உங்கள் கொள்கைத்தலைவர் பட்டியலில் சேர்த்துள்ளீர்கள்.இன்றைக்கு ஆளுநரைத் தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
பேரவைத் தலைவர் அவர்களே,கள யதார்த்தத்திற்கும் ஆளுநர் உரைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆளுநர் உரை என்பது,அரசின் கொள்கைகளை,திட்டங்களை Mission and Vision Statement என்று சொல்வார்கள். அதன்படி அமைந்திருக்கவேண்டும்.ஆனால்,இந்த அரசின் ஆளுநர் உரையில் இருக்கிற அனைத்து கன்டென்டுகளும், ஆளும்கட்சியினர் சமூகவலைதளத்தில் `ரீல்ஸ்’ போடுவதற்கு உதவுமே தவிர,உண்மையான (Real) பிரச்சினைகளுக்குக் கைகொடுக்க,உதவுவதாக எந்தத் தீர்வையும் தருவதாக எங்களுக்குத் தெரியவில்லை.
வழக்கமாக எதிர்க்கட்சித் தலைவர்கள்,எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிகளின் நிறைகுறைகளைப் பேசுவது வழக்கம். அதுதான் எதிர்க்கட்சியின் கடமை.ஆனால்,இப்போது இருக்கிற ஆளுங்கட்சியை விமர்சிப்பதில்,முந்தைய எதிர்க்கட்சிகளைவிட எங்களுக்கு அதிகப்பொறுப்பும் உரிமையும் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.அதற்குக்காரணம்,எங்களுடைய கூட்டணிக்கட்சியாக இருந்து,எங்கள் உடன்பிறப்புகளின் வாக்குகளில் வெற்றிபெற்றவர்களின் ஆதரவில்தான்,எங்களின் தயவில்தான் இன்றைக்கு இந்த அரசே நடந்துகொண்டிருக்கிறது என்பதை,நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
இன்னும் சொல்லப்போனால்,நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் மட்டுமல்லாமல்,ஆளுங்கட்சி வரிசையிலும் எங்களின் வாக்குகள் அமர்ந்திருக்கின்றன.ஆகவே,நான் ஏற்கனவே சொன்னமாதிரி நாங்கள் வெறும் எதிரிக்கட்சியாக இல்லாமல்,ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட விரும்புகிறோம்.அந்தவகையில்,பல்வேறு பிரச்சினைகளை எடுத்துவைக்க விரும்புகிறேன்.
முதலில்,கடந்த இரண்டு மாதங்களாக எங்களின் வேண்டுகோளை ஏற்று,கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை 15-ஆம் தேதி சரியாக மகளிரின் கணக்கிற்கு (Account-க்கு) அனுப்பியதற்கு,எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அதேபோல,எங்களுடைய தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை நாங்கள் கொடுத்துக்கொண்டு இருந்தோம்.அதை நீங்கள் வருகிற செப்டம்பர் மாதம் தந்தைபெரியாரின் பிறந்தநாளிலிருந்து எட்டாம்வகுப்புவரை விரிவாக்கம் செய்யப்போவதாக செய்திகளில் பார்த்தேன்.எங்களின் திட்டத்தை நீங்கள் விரிவாக்கம் செய்வதற்காக மீண்டும் எங்களின் பாராட்டுகளையும்,நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால்,எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கிய நான்முதல்வன் திட்டத்தை நீங்கள் முடக்குகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று கேள்விப்பட்டோம்.தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு இளைஞரும், அவரவர் துறையில்,நான்முதல்வன் என்று உருவாகவேண்டும் என்று,இந்தத்திட்டத்தை எங்கள் தலைவர் கொண்டு வந்தார்கள்.
இந்த நான்முதல்வன் திட்டத்தில் மட்டும் கடந்த நான்கு வருடத்தில் 41 இலட்சம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.நான்முதல்வன் திட்டம் மூலம் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு,அடுத்து அவர்கள் உயர்கல்வி படிக்க வழிகாட்டுகிறது.உயர்கல்வி படிக்கிற மாணவர்களுக்கு,எங்கு சென்று வேலை செய்யவேண்டும் என்று வேலைவாய்ப்புக்கான திறன்களைத் (Employability Skills-ஐ) நாங்கள் வலிமைபடுத்தியுள்ளோம்.முக்கியமாக,நான்முதல்வன் திட்டம் மூலமாக,யு.பி.எஸ்.சி.(UPSC) போன்ற குடிமைப்பணிகளுக்கான (Civil Services) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு விடுதி (Hostel) வசதியோடு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.முதல்நிலைத் தேர்வுக்குத் (Prelims) தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் 7,500 ரூபாய்,முதன்மைத் தேர்வுக்குத் (Mains) தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் 25,000 ரூபாய் என்று இந்த நான்முதல்வன் திட்டத்தின் மூலம் எங்கள் அரசு கொடுத்தது.அதுமட்டுமல்லாமல்,டெல்லிக்கு நேர்காணலுக்குச் (Interview-க்கு) சென்று வருவதற்குத் தேவையான போக்குவரத்துக் கட்டணத்தையும் அரசே ஏற்றுள்ளது.
சென்ற ஆண்டு மட்டும்,தமிழ்நாட்டில் இருந்து யு.பி.எஸ்.சி.(UPSC) தேர்ச்சி பெற்ற 60 பேரில்,56 பேர் நான்முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்கள்.அதிலும்,குறிப்பாக,அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த சகோதரி ராஜேஸ்வரி நான்முதல்வன் திட்டத்தால் பயன்பெற்றவர்.இப்படிப்பட்ட நான்முதல்வன் திட்டத்தை கைவிடவேண்டிய அவசியம் என்ன? என்பதை முதலமைச்சர் அவர்கள் தன் பதிலுரையில் கூறவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
சமீபத்தில் டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் அவர்கள்,நிதிஆயோக் கூட்டத்தில் பல்வேறு விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.அதில் குறிப்பாக,நம் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரியமாநிலமாக பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறது என்று பெருமையாகப் பேசியிருக்கிறார்.தமிழ்நாட்டில் டாக்டர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு,எங்கள் தலைவர் அவர்களால் வளர்க்கப்பட்டு,கடந்த ஆட்சியில் என் கட்டுப்பாட்டில் இருந்த மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று முதலமைச்சர் அவர்கள் பேசியிருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே தொழிற்சாலைப் பணியாளர்களாக (Factory workers) இருக்கின்ற பெண்களில் 42 சதவிகித மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.தமிழ்நாட்டில் இருக்கிற பெண்கள் முன்னேற்றம்,சுகாதாரம் எல்லாமே சிறப்பாக இருக்கிறது என்று,நம் முதலமைச்சர் அவர்கள் டெல்லியில் சொல்லி இருக்கிறார்.திரைப்படங்களில் பார்த்தீர்கள் என்றால்,ஒரே பாட்டில் 5 நிமிடத்தில் ஏழையாக இருப்பவன்,பெரிய பணக்காரன் ஆகிடுவான்.ஆனால்,நிஜத்தில் ஒருமாத ஆட்சியில்,தமிழ்நாடு போன்ற மிகப்பெரிய மாநிலத்தை,அந்தஅளவுக்கு வளர்த்துவிட முடியாது.இந்தச்சாதனைகள் எல்லாம் யார் ஆட்சிக்காலத்தில் நடந்தது என்று மக்களுக்கும் தெரியும்,மக்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது முதலமைச்சருக்கும் தெரியும்.
பேரவைத் தலைவர் அவர்களே,இந்த ஆட்சியில் இன்னொரு பழக்கமும் புதிதாக வந்திருக்கிறது.எங்களுடைய திராவிடமாடல் ஆட்சியில் நாங்கள் எடுத்த நடவடிக்கையால்,ஏதாவது நல்லது நடந்தால்,உடனே அதற்குத் தங்கள் பெயரில் `ஸ்டிக்கர்’ ஒட்டுகிறார்கள்.அதாவது ‘வரலாற்றிலேயே முதன்முறை’ (First ever time in the history) என்று சொல்கிறீர்கள்.அப்படித் தவறாக சொன்ன சில பொய்ச்செய்திகளை குறிப்பிட விரும்புகிறேன்.பேருந்துகளில் மூத்தகுடிமக்கள்,பள்ளிமாணவர்கள் எல்லாம் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள,இந்த ஆட்சியில்தான் முதன்முதலாக அந்தத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்று பொய்ச்செய்திகளைப் பரப்பிவிட்டார்கள்.அரசுப்பள்ளிகளில் வழங்கப்படுகிற பள்ளிப்பைகளில் முதலமைச்சர் புகைப்படம் இல்லாமல் கொடுப்பதாகச் சொல்லி `பர்ஸ்ட் டைம் இன் தி கிஸ்ட்ரி’ என்று ஒரு டேக் போட்டு பொய்ச்செய்திகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.இவையெல்லாம் எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம்,எங்கள் திராவிட மாடல் அரசில் எங்கள் முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள்.இப்படி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய லிஸ்ட் மிகப்பெரிய லிஸ்ட்.
இன்னொரு முக்கியமான ஒருவிசயம் பற்றி இந்தநேரத்தில்,நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையாசொத்துகளின் வருவாய் அதன் புனிதமான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் இருக்கிறது.இந்தக்கருத்தைப் பார்க்கும்போது, அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்று சொல்கின்ற பா.ஜ.கவின் குரலாகத்தான் த.வெ.க.அரசும் சொல்கிறதோ என்கின்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது.பா.ஜ.கவும்,வலதுசாரிகளும்,அறநிலையத்துறை,பள்ளி, கல்லூரிகளை நடத்தக்கூடாது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.இதற்காக வழக்குகூடத் தொடர்ந்து இருக்கிறார்கள்.இந்த நிலைப்பாடு திருமணமண்டபங்கள்,வணிக வளாகங்களோடு நிற்குமா அல்லது கல்வி நிறுவனங்களுக்கும் தொடருமா?
பேரவைத் தலைவர் அவர்கள்,முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் அதற்கான சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.இப்பொழுது இருக்கின்ற அமைச்சர் அவர்களும் சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். கார் பார்கிங் ஸ்பெசிலிட்டி என்பதும் ஒரு அத்தியாவசிய தேவைதான்.அது ஒன்றும் தேவையில்லாதது இல்லை. இப்பொழுது பலரும் கார் வைத்திருக்கிறார்கள்.கோயிலுக்கு வருபவர்கள்,காரில்தான் வருவார்கள்.அது இப்போது தேவைப்படுகின்ற வசதிதான்.நான் கேட்டுக்கொள்வது எல்லாம்,எங்களின் ஆட்சியில் அறநிலையத்துறை சார்பாக நான்கு கல்லூரிகளைத் திறந்திருக்கிறோம்.அதில்,ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் படிக்கிறார்கள்.இந்த ஆட்சியாளர்கள் என்ன பண்ணப்போகிறார்கள்? இவர்கள் நிலைப்பாடு என்ன?
பேரவைத் தலைவர் அவர்களே,தமிழ்நாட்டில் இருக்கிற 12 மாநகராட்சிகளிலும்,தூய்மைப்பணி செய்வதைத் தனியார்மயம் செய்யப்போவதாகச் செய்திகள் வருகின்றன.கடந்தகாலத்தில்,போராடிய தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்த இன்றைய முதலமைச்சர்,ஆட்சிக்கு வந்ததும் தூய்மைப்பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று அப்போது வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.ஆனால்,சொன்னதற்கு நேர்எதிராக,தனியார்மயம் என்று செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன? இதற்கு முதலமைச்சர் அவர்கள் அவர் பதிலுரையில் விளக்கத்தைத் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே,சும்மா சொல்லக்கூடாது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்த ஒரேமாதத்திற்குள்,தங்களின் பெரம்பூர் தொகுதியை முதன்மைத்தொகுதியாக மாற்றிக் காட்டியுள்ளார்.எதில் நம்பர் ஒன் என்று பார்த்தீர்கள் என்றால் இன்று தமிழ்நாட்டிலேயே மின்வெட்டுப் பிரச்சினையில் முதலிடத்தில் இருப்பது பெரம்பூர் தொகுதிதான்.ஆளுங்கட்சிக்காரர்கள் என்ன பேசிக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா?
அண்ணன் பவருக்கு வந்தால்,தமிழ்நாடு மாறும் என்று பார்த்தோம்.ஆனால்,அண்ணன் கைக்கு பவர் வந்த நாளிலிருந்து தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டதே என்று இன்றைக்கு ஆளுங்கட்சிக்காரர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் இந்த மின்வெட்டுப் பிரச்சினையினால் தமிழ்நாட்டை இருட்டாக்கி முதலீடுகளைக் கோட்டை விட்டுவிடாதீர்கள் என்றுதான் உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.அதேமாதிரி நம்முடைய மின்சாரத்துறை அமைச்சர்,இரண்டுநாட்கள் பொறுமையாக இருங்கள்,இரண்டுநாட்கள் பொறுமையாக இருங்கள் என்று சொல்லும்போது எனக்கு அடுத்த இரண்டுநாட்களுக்குத் தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்குமா இல்லையா? இல்லை நாங்கள் எல்லாம் பொறுமையாக இருக்கவேண்டுமா என்று அதைச் சிம்பாலிக்காகச் சொல்கிறாரா? என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது.இன்றைக்கு எங்குபார்த்தாலும் அறிவிக்கப்படாத ஒரு மின்வெட்டாக இருக்கிறது.
குடும்பங்கள் எல்லாம் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்து,சாலைமறியலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சிலநாட்களுக்கு முன்பு எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக,அம்பத்தூரில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம்.அங்கே எங்களுடைய முன்னாள் அமைச்சர்,இப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் சிறப்புப் பேச்சாளராகச் சென்றிருந்தார்.அவர் பேச ஆரம்பித்த உடனே,மின்சாரம் தடைபட்டுவிட்டது.30 நிமிடம் வரைக்கும் காத்திருந்து…காத்திருந்து…நாங்கள் என்ன செய்துவிட்டோம், பொதுக்கூட்டத்தை அரசுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டமாக மாற்றி விட்டோம்.ஏனென்றால் மின்சாரமே வரவில்லை, ஆர்ப்பாட்டமாக நடத்தி முடித்துவிட்டோம்.
அதுமட்டுமல்ல,இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்,திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் மக்கள் போகும்பொழுது,தினசரி மின்சாரத்தடை செய்கிறார்கள்.அவர்களுடைய பாதுகாப்பை,இன்றைக்கு ஒரு மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக ஆக்கிவைத்திருக்கிறது இந்த அரசு.செங்கல்பட்டு அருகே சூனாம்பேட்டில் கருப்பாயி என்கிற 75 வயது மூதாட்டி,அவர்களுக்கு உடம்பு சரியில்லை,வீட்டில் வென்டிலேட்டர் சப்போர்ட்டில் இருந்தபொழுது,பவர்கட் ஏற்பட்டு மூச்சுத்திணறி இறந்துபோய்விட்டார்கள்.
பவர் இல்லை என்று,தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் போய் கேட்கலாம் என்று பார்த்தால்,சட்டமன்ற உறுப்பினர் யார் என்று மக்களுக்குத் தெரியவில்லை.நிறையபேருக்கு இங்கு இருக்கக்கூடியவர்கள்,நான் தவறாகச் சொல்லவில்லை,எல்லாருமே புதுமுகங்கள்.நமக்கே பாதிப்பேரை வெளியில் பார்க்கும்பொழுது இவர் சட்டமன்ற உறுப்பினரா, இல்லையா? என்று தெரியவில்லை,உள்ளே வந்தால்தான் தெரிகிறது.
முன்னரெல்லாம் புயல்,மழை நேரத்தில் ஸ்கூலுக்கு லீவ் விடுவார்கள்.ஆனால்,இந்த ஆட்சி அமைந்த பிறகுதான் முதன்முறையாக மின்சாரம் இல்லை என்று பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆரம்பித்திருக்கிறார்கள்.சென்னை, பெரம்பூர் மற்றும் வியாசர்பாடியில் கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று,நான்கு தனியார்பள்ளிகளுக்கு மின்சாரம் இல்லை என்று விடுமுறை விட்டார்கள்.
முன்னாடி மழை வரும்பொழுதெல்லாம்,பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சியை ஆன் பண்ணி இன்றைக்குப் பள்ளி இருக்கிறதா,இல்லையா என்று தெரிந்துகொள்வார்கள்.ஆனால்,இப்பொழுதெல்லாம் டி.வி.ஆன் பண்ணவில்லை என்றாலே தெரிந்துகொள்கிறார்கள்.சரி,இன்றைக்கு மின்சாரம் இல்லை,இன்றைக்குப் பள்ளி விடுமுறைதான் என்று. எனவே ஒரு மிகப்பெரிய ஒரு மேம்பட்ட தொழில்நுட்பத்தை (அட்வான்ஸ் டெக்னாலஜியை) இந்த அரசு உருவாக்கியிருக்கிறது.
எதிர்க்கட்சியான எங்களது பொதுக்கூட்டத்தில்தான் மின்சாரத்தடை ஏற்படுகிறதோ என்று நாங்கள் கூட நினைத்துக் கொண்டிருந்தோம்,வருத்தப்பட்டோம்.ஆனால்,அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரான அண்ணன் திரு தொல்.திருமாவளவன் அவர்களும் மின்சாரத்தடையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஒன்றியஅமைச்சர் அண்ணன் ப.சிதம்பரம் அவர்கள் போயிருக்கிறார்.அவர் உள்ளே சென்ற உடனே மின்சாரம் தடைபட்டுவிட்டது. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் இரண்டுபேரும் இருட்டிலேயே உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள்.மின்சாரம் வருமா, வராதா என்று ஏ.சி.இயங்கவில்லை,வியர்த்துக்கொட்ட கொட்ட இரண்டுபேரும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்று அண்ணன் திருமா அவர்களே பதிவு செய்திருக்கிறார்.இந்தஆட்சியில் தமிழ்நாட்டின் தலைநகரத்துக்கே இதுதான் நிலைமை.
பவரில் ஷேரிங் கொடுத்த ஆளுங்கட்சியால்,அவர்கள் அமைச்சரவையில் இருக்கக்கூடிய கட்சியினுடைய அலுவலகத்திற்கு மின்சாரம் கொடுக்க முடியாமல் இன்றைக்குத் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள்.ஏன்,இன்னும் சொல்லப்போனால் இரண்டுநாட்களுக்கு முன்னாடி ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே (ஹெட் ஆபீஸிலேயே) மின்சாரத்தடை ஏற்பட்டுவிட்டது.அப்பொழுது அங்கு வந்தவர்கள் எல்லாம்,ஆளுங்கட்சியாக இருந்தும்,பனையூரிலேயே பவர் இல்லையே என்று புலம்பிக்கொண்டு சென்றதாகத் தகவல் வந்திருக்கிறது.
ஆகமொத்தம் இன்றைக்குத் தமிழ்நாடு உண்மையாகவே (லிட்ரலாக) ஒரு இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது. மின்வெட்டினால் இன்றைக்குப் பல நிறுவனங்கள் முடங்கிப் போயிருக்கின்றன.குறிப்பாக,எம்.எஸ்.எம்.இ.(MSME) என்று சொல்லப்படுகிற குறு,சிறு நிறுவனங்கள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.ஏற்கனவே மேட்டூரில் ஜூன் 12 ஆம் தேதி நீங்கள் தண்ணீர் திறந்து விட்டிருக்கவேண்டும்,திறந்துவிடவில்லை.மின்வெட்டினால் மோட்டார் பம்ப்செட் மூலமும் விவசாயம் செய்யமுடியவில்லை என்று விவசாயிகள் இன்றைக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.மின்வெட்டுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளக்கத்தை,இந்த அரசின் சார்பாகக் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.லோடு அதிகமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.இன்னும் ஒருபடி மேலே சென்று,இன்றைக்கு ஃபியூஸ் கரியரை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிச் சொன்னதும்,இந்த ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் திரு ஆதவன்தீட்சண்யா அவர்கள் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.என்ன தெரியுமா எழுதியிருக்கிறார்? கரியரின் உச்சத்தில் ஆரம்பித்து டிபன்கரியரில் போய் நின்று,இன்றைக்கு ஃபியூஸ்கரியரில் முடிந்திருக்கக்கூடிய ஆட்சி என்று திரு ஆதவன்தீட்சண்யா என்ற எழுத்தாளர்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் பதிவு செய்திருக்கிறார்.
மின்சாரத்தடைக்கு இவர்கள் சொல்கிற காரணங்கள் எதையுமே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிந்ததும், இவர்களுடைய வழக்கமான ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்துவிட்டார்கள்.என்ன தெரியுமா அந்த ஆயுதம்? எல்லாவற்றிற்கும் தி.மு.க.தான் காரணம் என்று சொல்வது.இப்போது பவர்கட்டுக்கும் தி.மு.க.தான் காரணம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்படிப் பழிபோடுவதில் காட்டுகிற வேகத்தை,மின்சாரத்தை மீண்டும் கொண்டு வருவதில் காட்டினால் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.எங்களுடைய ஆட்சியில் ஏற்படாத மின்வெட்டு,இந்த ஆட்சியில் தொடர்ந்து இவ்வளவு அதிகமாக ஏற்பட என்ன காரணம்? அரசின் நிர்வாகத் திறமையின்மையா? இல்லை,உண்மையிலேயே ஏதாவது தொழில்நுட்பப் பிரச்சினைகள் (Technical issues) இருக்கின்றனவா? அப்படி ஏதாவது இருந்தால்,அதைத் தீர்க்க, இந்த அரசுக்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும்? இந்த நிலைமை தொடராமல் இருக்க,என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய பதிலுரையில் சொல்லவேண்டும்.
ஒரே ஒரு ஆறுதல்,ஒரே ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்,ஆளுநர் உரையின் பொழுது சட்டமன்றத்தில் மின்சாரத்தடை ஏற்படவில்லை.அதற்கு இந்த அரசைப் பாராட்டலாம் என்று நான் நினைத்தேன்.அப்படி நினைக்கும்பொழுது பார்த்தீர்கள் என்றால்,சட்டசபை நிகழ்ச்சியை,நேரலையில் துண்டித்துவிட்டார்கள்.இன்றைக்கு நேரலையில் வந்துகொண்டு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள்.
பேரவைத் தலைவர் அவர்களே,எங்களுடைய திராவிடமாடல் ஆட்சி நடந்தபொழுது, ஐந்துவருடமும் நாங்கள் குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து சொன்ன தேதியில் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறோம்.ஆனால்,புதியஅரசு ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய இந்தச்சமயத்தில் மேட்டூர் அணையில் நீர் திறக்கிற அளவுக்கு,அங்கே தண்ணீர் இல்லை.குறிப்பாக,ஜூன் மாதத்தில் 9.91 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு போட்டது.ஆனால்,இந்தநிமிடம் வரைக்கும் அந்த உத்தரவைக் கர்நாடகா நிறைவேற்றவில்லை.அதை நிறைவேற்ற முதலமைச்சர் என்ன செய்யப்போகிறார் என்று பதிலுரையில் சொல்லவேண்டும்.
அதேபோல் டெல்டாவில் 6 லட்சம் ஹெக்டேர் அளவுக்குக் குறுவை சீசனில் குறுவை சாகுபடியாகும்.இந்தமுறை மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காததால்,அரசு அறிவித்திருக்கக்கூடிய குறுவை சிறப்புத்தொகுப்பு (Special package) 134 கோடி ரூபாய்க்கு அறிவித்திருக்கிறீர்கள்.அது போதவில்லை என்று இன்றைக்கு விவசாயிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.சிறப்புத்தொகுப்பு கஷ்டத்தைப் போக்காது,உரிய நிவாரணத்தை விரைவாக அறிவிக்கவேண்டும் என்று விவசாயிகள் எல்லாம் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.அதனால்,டெல்டா விவசாயிகளின் சார்பாக ஒரு கோரிக்கையை முதலமைச்சர் அவர்களுக்கு வைக்க விரும்புகின்றேன்.
தமிழ்நாடு முழுக்கப் போராடிக்கொண்டு இருக்கக்கூடிய அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து, முதலமைச்சர் அவசரமாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவேண்டும்.காலதாமதம் இல்லாமல் விரைவாக அந்தக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு இன்னொரு பெரிய பிரச்சினையும் ஏற்பட்டிருக்கிறது.தேர்தலுக்கு முன்பு நீங்கள் சொன்ன வாக்குறுதி,ஐந்து ஏக்கர் வரைக்கும் நிலம் வைத்திருக்கிற விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று நீங்கள்தான் சொன்னீர்கள்.ஆனால் விவசாயிகளை இன்றைக்குச் சிறு,குறு விவசாயிகள் என்று பிரித்து, அதிலும் நிறைய அடுக்குகள் (Slabs) ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.ஒரு இலட்சம் அளவுக்குக் கடன் வாங்கியிருந்தால்,5,000 ரூபாய் வரைக்கும்தான் தள்ளுபடி கிடைக்கும் என்ற நிலைமையை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறீர்கள்.அதிலும் ஒரு மாற்றம் (Change) கொண்டு வந்தீர்கள்.75,000 ரூபாய் வரைக்கும் வாங்கியவர்களுக்கு முழுத்தள்ளுபடி என்று சொல்லியிருக்கிறீர்கள்.
இப்போது அதில் இன்னொரு மாற்றம் என்னவென்றால்,ஒரே குடும்பத்தில் உள்ள மூன்றுநபர்கள்வரை கடன் பெற்றிருந்தாலும்,தற்போது ஒரு குடும்பஅட்டைக்கு,ஒரு வேளாண்கடன் மட்டுமே தள்ளுபடி செய்ய அரசாணை வழங்கப்பட்டிருக்கிறது.எங்களுடைய ஆட்சியில்,கடந்தகால ஆட்சிகளில் இதெல்லாம் முழுத்தள்ளுபடி கொடுத்திருக்கிறோம்.எனவே,அதையும் இந்த விவசாயிகளை இதற்குமேல் குழப்பாமல் இந்த அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.அரசின் இந்த ஏமாற்று அறிவிப்பைக் கண்டித்து,போராட்டம் நடத்திய விவசாயிகள்மேல் தடியடியும் நடத்தியிருக்கிறீர்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் சொன்னார்,எனக்கு இன்னொரு ஜென்மம் இருந்தால்,நான் விவசாயியாகப் பிறக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.ஆனால், இன்னொரு பக்கம் விவசாயிகள்மேல் தடியடியும் நடத்தியிருக்கிறீர்கள்.விவசாயியாகப் பிறக்க இன்னொரு ஜென்மம் எல்லாம் தேவையில்லை,எப்பொழுது நினைத்தாலும் போய் விவசாயி ஆகிவிடலாம்.ஆகவே,வெற்றுவார்த்தைகளால் விவசாயிகளை ஏமாற்றாமல் இந்த அரசு செயல்படவேண்டும் என்று நாங்கள் விரும்பிக் கேட்டுக்கொள்கின்றோம்.
மேட்டூர் அணையைத் திறக்காதது,மேகதாது அணைப் பிரச்சினை,பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம் என்று இந்த ஒருமாதத்தில் மட்டும் விவசாயிகள் பல சோதனைகளைச் சந்தித்திருக்கிறார்கள்.
பேரவைத் தலைவர் அவர்களே,இன்னொரு முக்கியமான விசயம்,இந்த ஆட்சியில் அரசுப்பள்ளிகளில் நடக்கும் கூத்தையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கின்றது.முன் எப்போதும் இல்லாதவகையில் அரசுப்பள்ளிகளுக்குள்ளே சட்டமன்ற உறுப்பினர்கள் போகிறார்கள்.தப்பு இல்லை.போகவேண்டும்,ஆய்வுகளெல்லாம் செய்யவேண்டும்.ஆனால்,பள்ளி மாணவர்கள் மத்தியில் மோசமான கருத்துகளைக் கொண்ட பாடல்களையெல்லாம் ஒளிபரப்பி,எல்லாரையும் நடனமாடச் சொல்கிறார்கள்.முதலமைச்சரின் புகைப்படம் மாட்டுவதோ,பாடல் போடுவதோ இங்கு பிரச்சினை கிடையாது.ஆனால்,அவர்கள் என்ன பாட்டை,மாணவர்கள் மத்தியில் போடுகிறார்கள் என்பதுதான் இங்கு இருக்கக்கூடிய பிரச்சினை.
மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிற மாதிரியான கருத்துள்ள பாடல்களைப் போட்டால் பரவாயில்லை.ஆனால்,சினிமா படங்களில் வரும் குத்துப்பாடல்கள்,தவறான அர்த்தம் கொண்ட பாடல்களையெல்லாம் குழந்தைகள் மத்தியில் ஒளிபரப்புவதை ஏற்கவே முடியாது.எனவே முதலமைச்சர் தலையிட்டு,உடனே இதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அடுத்து,மிகமுக்கியமான ஒரு பிரச்சினையை இந்தஅரசின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இன்றைக்குத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்று செய்திகளைப் பார்த்தால் அவ்வளவு கொடூரமாக இருக்கிறது.ஒரு மாதத்தில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதில் 100-க்கும் அதிகமான குற்றங்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.
ஜனநாயக நடைமுறைக்கு எதிராகக் குழந்தைகளைப் பயன்படுத்திப் பெரியவர்களிடம் வாக்கு கேட்டார் இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர்.ஆனால்,அவர் ஆட்சியில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை,பெரியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்கிற நிலைமை இன்றைக்கு நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த புதியஅரசு ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே,கோயம்புத்தூரில் 10வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார்கள்.முக்கியமாகத் தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு(கேஸ்).கும்மிடிப்பூண்டியில் ஒரு மூன்றுவயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,புதரில் வீசப்பட்டு,அதன்பின்பு,அந்தக்குழந்தை இறந்து போய்விட்டது.இந்தச் சம்பவத்திற்கு நீதிகேட்டு அங்கு இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.
கோயம்புத்தூரிலும் சரி,கும்மிடிப்பூண்டியிலும் சரி,இரண்டு சம்பவத்திலேயுமே மரணமடைந்த குழந்தைகளுடைய உடலை,பெற்றோரிடம் முறையாகக் கொடுக்காமல்,வேறுஇடத்தில் காவல்துறை மூலமாகவே அடக்கம் செய்திருக்கிறார்கள்.இதையெல்லாம் பார்க்கிறபொழுது,நாம் இன்றைக்குத் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா இல்லை உத்தரபிரதேசம்,மத்தியபிரதேசம் மாதிரி வடநாட்டில் இருக்கிறோமா என்று எங்களுக்குச் சந்தேகம் வருகிறது.
சிங்கப்பெண் படை என்று ஒரு திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கினார்.அந்தத்திட்டம் வந்த அடுத்தநாளே,காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மூன்றுபேர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டும்,கடந்த ஜூன் 12 ஆம் தேதி 24 மணிநேரத்தில்,12 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.சிங்கப்பெண் படை குற்றவாளிகளைப் பின்தொடருவார்கள்(சேஸ் பண்ணுவார்கள்) என்று பார்த்தால்,அவர்களும் அமைதியாக (கூலாக) ரீல்ஸ் போட்டுப் போஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று சொல்வார்கள்.அதைச் சிங்கப்பெண் படை ஃபாலோ பண்ணுதோ என்று மக்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது.
இந்த ஒருமாதத்தில் நடந்த குற்றச் சம்பவங்களையெல்லாம் எடுத்துப் பார்த்தால்,பெரும்பாலான குற்றவாளிகள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.இவர்கள் ஆட்சிக்கு வந்து தொகுதிவாரியாகச் சென்று நலத்திட்ட உதவிகளெல்லாம் செய்வார்கள் என்று பார்த்தால்,அவர்கள் கட்சிக்காரர்கள் தொகுதிவாரியாகச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆளுங்கட்சியின் ஆலந்தூர் பகுதிச்செயலாளர்,பெயர் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணுக்கு பணஉதவி செய்கிறேன் என்று சொல்லி,அவர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்த முயற்சி பண்ணி இருக்கிறார்.
சேலத்தில்,இன்னொரு பொள்ளாச்சி சம்பவம் மாதிரி,ஆளுங்கட்சி ஆதரவாளரான மணிகண்டன் எனும் நபர்,50-க்கும் அதிகமான பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்.
திருவாரூரில் ஆளுங்கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர்,கல்லூரி மாணவியைக் ஈவ்-டீசிங் செய்து இப்போது கம்பியை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
இது எல்லாவற்றிற்கும் மேல் ஒரு கொடுமை,தூத்துக்குடியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணை,இரண்டு ஆளுங்கட்சி ஆட்கள் காரில் அழைத்துக்கொண்டு போய்,மயக்கமருந்து கொடுத்து,கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசிய பாதிக்கப்பட்ட பெண்,திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன் சொல்லித்தான் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.
எல்லாம் மேலிடத்துக்குத் தெரியும் என்று பாதிக்கப்பட்ட பெண் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.யார் அந்த மேலிடம் என்று இன்றைக்கு மக்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.தனக்கு நேர்ந்த கொடுமையை,ஆளுங்கட்சியினுடைய அமைச்சர்கள்,இரண்டாம்கட்ட,மூன்றாம்கட்டத் தலைவர்களிடம் சொன்னதாகவும் பாதிக்கப்பட்டபெண் இன்றைக்குச் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் நடந்தது என்ன?
யார் தப்பு செய்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று சொன்னார் நம் முதலமைச்சர்.ஆனால்,இந்தச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.அதற்கு மாறாக,பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறீர்கள். இதற்குப்பேர்தான் மாற்றமா? இதற்குப்பேர்தான் தூயசக்தியா? என்று மக்கள் கேட்கிறார்கள்.
முதலமைச்சர் அவர்களே,பேரவைத் தலைவர் அவர்களே,நம்முடைய முதலமைச்சர் அவர்கள்,ஆறுமாதம் டைம் எடுத்துக்கொண்டு வந்து சட்டஒழுங்கை நிலைநாட்டுற வரைக்கும் நாங்கள் காத்துக்கொண்டு இருக்கமுடியாது, நாடும் தாங்காது.
இதைப்பற்றிக் கேள்வி எழுப்பினால் கூட,காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கக்கூடிய முதலமைச்சர் எதுவும் பேசமாட்டேன் என்கிறார்.To remain silent in the face of evil is itself evil(தீமைக்கு எதிராக மௌனமாக இருப்பதுகூட ஒரு தீமையே ஆகும்) என்று ஒரு பழமொழி உண்டு.அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இந்தஅரசுக்குச் சரியாகப் பொருந்துகிறது.ஆகவே முதல்வேலையாகச் சட்டஒழுங்கைக் காப்பாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து,இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே,சீர்திருத்தம் செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள்,செய்யுங்கள்.இந்த தூத்துக்குடியில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? அதுமட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தூத்துக்குடியில் ஒரு நிகழ்வு சொன்னேன் அல்லவா,உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்,அதற்கு மட்டும் கொஞ்சம் விளக்கம் கொடுத்தீர்கள் என்றால்,நன்றாக இருக்கும்.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய மிகப்பெரிய தொழில் முதலீடுகள் எல்லாம் இன்றைக்குப் பக்கத்து மாநிலங்களுக்குப் போவதாகப் பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.தொழில்துறை கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்புகளில் முந்தைய ஆட்சியில் இருந்திருக்கக்கூடிய அதிகாரிகளைத் திடீரென்று மாற்றியதும் ஒரு தவறான முடிவு என்று நாங்கள் கருதுகிறோம்.இதனால்,தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பத்திரிகையில் தொடர்ந்து அறிக்கைகள் எல்லாம் வந்துகொண்டு இருக்கின்றன.
இதற்கு இடையில்,ஆளுநர் உரையில் தலைமைச்செயலாளர் தலைமையில் தமிழ்நாடு இன்வெஸ்டர் ப்ரொமோஷன் கமிஷன் என்ற பெயரில் ஒரு புதியஅமைப்பு உருவாக்கப்படும் என்று அதில் தெரிவித்திருக்கிறீர்கள். அப்படியென்றால்,இப்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற `கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பு’ என்னவாகும்? என்று முதலமைச்சருடைய பதிலுரையில் சொல்லவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பேரவைத் தலைவர் அவர்களே,இந்த அரசின் முன்பாக இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன,ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.இவற்றையெல்லாம் தீர்க்க முயற்சி பண்ணாமல்,அடுத்தகட்சி ஆட்களை இழுக்கிற வேலையைத்தான் நீங்களெல்லாம் முழுவீச்சில் செய்துகொண்டு இருக்கிறீர்கள்.இந்த அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நான் குறிப்பிட்டுச் சொன்னேன்,புதுமையான ஆட்சி என்று சொன்னீர்கள்,கடைசியில் `புஷ்பா பட ஆட்சி’யைத் கொடுத்திருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தேன்.அந்தஅளவுக்குக் குதிரை பேரம் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.
`த்ரீ சீட்டர் சோபா’ இன்றைக்கு`ஃபைவ் சீட்டர் சோஃபா’வாக மேம்படுத்தியிருக்கிறீர்கள்.ஏற்கனவே சோபா அனுப்பி அடுத்தகட்சி எம்.எல்.ஏ.க்களை எல்லாம் இழுத்துக்கொண்டு இருந்தீர்கள்.இன்ஸ்டா மார்ட்டில் பொருட்களை வாங்குவது மாதிரி இன்ஸ்டன்ட்டாக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.வாங்கி ராஜினாமா செய்ய வைத்து விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஊழல்சக்தி,ஊழல்சக்தி என்று சொல்லிட்டு அதே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்றைக்கு ஒரு மச்சத்தை மட்டும் வைத்துவிட்டு,தூயசக்தியாக நீங்கள் மாற்றிவிட்டீர்கள்.அதனால்தான் எங்களுடைய தலைவர் சமீபத்தில் சொன்னார்,தீர்ந்துபோன சக்திகளிடம் திருடுற அளவுக்குக் காய்ந்துபோன சக்தியாக இன்றைக்கு இந்த ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.ஆகவே,இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் அவர்கள் தன் பதிலுரையில் அவர் விளக்கம் அளிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.முக்கியமாக, இந்த ஆள் பிடிக்கிற வேலையை நிறுத்திவிட்டு,இனியாவது ஆட்சி நிர்வாகத்தில் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே,உங்களுடைய தேர்தல் முக்கியமான வாக்குறுதிகள்,படித்து வேலையில்லாத இளைஞர்கள் அவர்களுக்கெல்லாம் மாதம் 4,500 ரூபாய் தருவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்,அதைச் சீக்கிரம் ஒரு ஆறுமாதத்தில் கொடுக்கவேண்டும்.கொடுங்கள்.மகளிருக்கு நீங்கள் சொன்ன உரிமைத்தொகை,மாதம் 2,500 ரூபாய் உரிமைத்தொகை,வருடத்திற்கு ஆறு சமையல் கேஸ் சிலிண்டர்,தாய்மாமன் சீர்,இதெல்லாம் ஆறுமாதத்தில் கொடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.ஆனால்,இதையெல்லாம் எப்படிக் கொடுக்கப்போகிறீர்கள் என்று ஒரு டைம்லைனை முதலமைச்சர் தன்னுடைய பதிலுரையில் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல்,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,மின்வெட்டு,விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு உடனடியான ஒரு தீர்வு காணவேண்டும்.
ஆளுநர் உரையில் இதற்கான விளக்கம் இல்லாததால்,முதலமைச்சரின் பதிலுரையிலாவது இவையெல்லாம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.இப்போது வழக்கம்போல் பழக்கதோசத்தில் எல்லாவற்றுக்கும் தி.மு.க.தான் காரணம் என்று எங்கள்மீது பழியைத் தூக்கிப்போட்டு,தப்பித்துக் கொள்ளாமல் தீர்வை நோக்கியேதான் முதலமைச்சரின் பதில் இருக்கவேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆளுநர் உரையில் இருமொழிக்கொள்கை,மாநிலஉரிமை,சமூகநீதி,மகளிர் முன்னேற்றம் என்று தி.மு.க சொன்னதையே ப்ளுபிரிண்டாக ஃபாலோ செய்து,இந்தஅரசின் கொள்கை முடிவுகளாக அறிவித்து இருக்கிறீர்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம்.மற்றபடி ஆளுநர் உரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ரோடுமேப் எதுவும் இல்லை என்று கூறிக்கொண்டு,முழுக்க முழுக்க முதலமைச்சரின் புகழ் உரையாகத்தான் இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது என்று சொல்லி,வாய்ப்புக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதிஸ்டாலின் உரையாற்றினார்.


