
மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்….
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன்,உ.வாசுகி,மாநில செயலாளர் பெ.சண்முகம்,மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன்,பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், தூய்மைப்பணி தனியார்மய முயற்சியை கைவிடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க ஆய்வு செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரியிருக்கிறது.இது தனியார்மயத்தை நோக்கிய முதல்படியாகும்.தூய்மைப்பணி தனியார்மய முயற்சிகளில் இதுவே தீவிரமான நடவடிக்கையாகும்.அவ்வப்போது தனியார்மய முயற்சிகளை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்வதும்,ஊழியர்கள் போராடி தடுப்பதும்,தள்ளிப்போடுவதும் கடந்தகால அனுபவமாக இருந்திருக்கிறது.
தொழிலாளிகள் ஓய்வு பெற்றால் அந்த இடங்களை வெளிமுகமை வைத்து நிரப்புவது என்று அரசாணை வெளியிடப்பட்டதும் மாநகராட்சியின் சில வார்டுகள்,மண்டலங்களில் தனியார்மயம் என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.ஆனால்,12 மாநகராட்சி தூய்மைப்பணி ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கும் செயலாக இது உள்ளது.
தேர்தலுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளர்கள் போராடும்போது தவெக அதை ஆதரித்திருக்கிறது.இந்தப்பின்னணியில்,இந்த தனியார்மய முயற்சி முற்றிலும் நியாயமற்றதாகும்.ஏழை மற்றும் அடிமட்ட குடும்பங்கள் நிரந்தர வருவாய் ஈட்ட ஈடுபடும் இந்தத்தொழிலை தனியார்மயமாக்குவது பொருத்தமற்றது.
எனவே,தூய்மைப்பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


