அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா? – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை புதிய விதிகளை 2020 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. அதில் 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அர்ச்சகர்கள் நியமனம், இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என 2021 அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.

பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோயில்களுக்குப் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும், அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்துசமய அறநிலையத்துறை தரப்பில், கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினைப் பின்பற்றி, கோயில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பாண்டாரி, நீதிபதி மாலா அமர்வு, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த விதிகள் செல்லும் என தீர்ப்பளித்தனர்.

மேலும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். எந்தெந்தக் கோயில்கள் எந்தெந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து தீர்ப்பளித்தனர்.

Leave a Response