புரெவி புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் – விளைவுகள் குறித்து வானிலை மையம் அறிவிப்பு

வங்கக் கடலில் நவம்பர் 28 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்றது.

இந்தப் புயல் நேற்று இலங்கையைக் கடந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து தமிழகக் கடலோரப் பகுதிகளை அடைகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், டிசம்பர் 1 ஆம் தேதி இரவு புயலாக வலுவடைந்தது. இந்தப் புயலுக்கு ‘புரெவி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இது இன்று பாம்பனுக்கு தென்கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே சுமார் 550 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையைக் கடக்கிறது. பின்னர் 3 ஆம் தேதி (இன்று) காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக் கடல் பகுதிக்கு நகரக்கூடும். அதனைத்தொடர்ந்து 3 ஆம் தேதி பிற்பகலில் பாம்பனை ஒட்டி வருகிறது. பிற்பகலுக்கு மேல் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளைக் கடந்து 3 ஆம் தேதி இரவு அல்லது 4 ஆம் தேதி அதிகாலையில் புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தென் கடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3 மணி முதல் தெரியும். இதன்காரணமாக சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.

4 ஆம் தேதி (நாளை) தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் நகரின் சில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடல், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அந்தப் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response