தமிழீழத்தில் நல்லகண்ணு நினைவஞ்சலி – விவரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்
இரா.நல்லகண்ணுவுக்கு தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய நிகழ்வு நடந்தேறியது.

அண்மையில் தமிழ்நாட்டில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணுவுக்கு,தமிழீழம், யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வுப் பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது இறுதி மூச்சுவரை தூய்மை, எளிமை, நேர்மை, பொதுவுடைமையைக் கடைப்பிடித்து வந்த
இரா.நல்லகண்ணு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளார்.

அவரின் தன்னலமற்ற தியாக வாழ்வை நன்றியுடன் நினைவிற் கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இந்நினைவுகூர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

யாழ்ப்பாணம்- நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.03.2026) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்நினைவுகூர் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சமூக ஆய்வாளர் தெ. மதுசுதனன் ஆகியோர் நினைவுரைகளைத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் செல்திசையுடன் தொடர்புபடுத்தி ஆற்றியிருந்தார்கள்.

பசுமை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் சோ. சிவநேசனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்ச்சியில் மண்டபம் நிறைந்த பொதுமக்கள் கலந்துகொண்டு இரா.நல்லகண்ணுவின் திருவுருவப் படத்துக்கு சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்வு தமிழீழம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இலங்கையிலும் அரசியலரங்குகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

– செல்வம்

Leave a Response