அருண்ராஜாகாமராஜுக்குக் கிடைத்த அதிர்ஷ்டக் கல்

நெருப்புடா உட்பட பல புகழ்பெற்ற பாடல்களை எழுதிய பாடலாசிரியர், பாடகர் ஆகியன மட்டுமின்றி ராஜாராணி தொடங்கி ரெமோ வரை பல படங்களில் நடித்த நடிகர் அருண்ராஜாகாமராஜ். பன்முகத்திறமை கொண்ட இவர் தற்போது ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அப்படம் பற்றிய விவரம்,,,

நவ ரத்தினங்களில் அன்பின் ரத்தினமாக கருதப்படுவது மரகதம். பச்சை நிறத்தில் பளீர் என்று பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் மரகதம், நன்மை, தீமை என இரண்டு முகங்களை கொண்ட ‘நாணயத்தோடு’ இணைந்தால், அதன் விளைவு எப்படி இருக்கும்?

சுவாரசியமான சிறப்பம்சங்களை உள்ளடக்கி, திகில் கதைக்களத்தோடு உருவாகி வருகிறது ஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படம். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ டில்லி பாபு தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஏ ஆர் கே சரவண் இயக்கி வரும் ‘மரகத நாணயம்’ திரைப்படத்தில் தற்போது மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

இப்படத்தில் நடிப்பது பற்றி அவர் குறிப்பிடுவதாவது,

“முதல் முறையாக நான் ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நரை முடியோடு தோன்றும் என்னுடைய கதாபாத்திரம் இந்த மரகத நாணயம் கதைக்களத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ‘ஒலி’ மற்றும் ‘குரல்’ தான் மரகத நாணயம் படத்தின் தனித்துவமான சிறப்பம்சம். ஆகையால், குரல் மாற்றி பேசும் என்னுடைய திறமை, இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இத்தகைய வலிமையான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்னைத் தேர்வு செய்த தயாரிப்பாளர் டில்லி பாபு சார் மற்றும் இயக்குனர் ஏ ஆர் கே சரவண் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த மரகத நாணயம் படத்தின் மூலமாக ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோருடன் கூட்டணி அமைத்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக என்னுடைய திரையுலக வாழ்வில், இந்த மரகத நாணயம் சிறந்ததொரு அதிர்ஷ்டக் கல்லாக விளங்கும் என முழுமையாக நம்புகிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அருண்ராஜா காமராஜ்.

Leave a Response