தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தைத் தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர்.
சார்லி சாப்ளின் முதல்பாகத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவாவே இந்த இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார்.
2002 ம் ஆண்டு சார்லி சாப்ளின் படம் வெளியாகி தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதுடன் இந்தியில் சல்மான்கான் நடித்து “ நோ எண்ட்ரி ” தெலுங்கில் “பெல்லம் ஊர் எல்தே” மலையாளத்தில் ஜெயராம் பாவனா நடித்த “ ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ் ” கனனடத்தில் ரமேஷ் அரவிந்த் நடித்த “ அல்லா புல்லா சுல்லா ” மற்றும் போஜ்பூரி, ஒரியா, மராத்தி போன்ற இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனையை ஏற்படுத்தியது.
சார்லி சாப்ளின் முதல் பாகத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரமே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.
ஒளிப்பதிவு-செளந்தர்ராஜன், இசை-அம்ரீஷ், பாடல்கள்-யுகபாரதி, ஷக்திசிதம்பரம், கலை-ஆர்.கே.விஜய்முருகன், நடனம் -ஜானி, எடிட்டிங்-பென்னி,வசனம்-கிரேஸி மோகன்
ஷக்தி சிதம்பரம் படம் என்றாலே காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அத்துடன் கமர்ஷியலும் சரிசமமாக கலக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் என்ன சொல்கிறார்?
பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும் நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்குப் போகும் போதும் அங்கு போய்ச் சேர்ந்த பிறகும் நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே சார்லி சாப்ளின் 2. திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம்? என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குநர்.