மோடி சந்திப்பில் ராமதாசு வைத்த 2 ரகசிய கோரிக்கைகள் ?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு மற்றும் அன்புமணி ராமதாசு ஆகியோர் அக்டோபர் 10 அன்று பகல் 11.30 மணியளவில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடந்தது.

சுமார் 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, பிரதமரிடம் சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை மருத்துவர் இராமதாசு வழங்கியுள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகள் மற்றும் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட மனிதநேய கோரிக்கை மீது பிரதமராகிய தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் இந்தக் கடிதத்தை தங்கள் முன் வைக்கிறேன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1991 ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

7 தமிழர்களை விடுதலை செய்ய சட்டப்படியோ, அரசியல் ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை. அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. அதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 8 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள இவர்களின் தண்டனையை, சீக்கிய குருமார்களில் ஒருவரான குருநானக்கின் 550-ஆவது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு குறைத்துள்ளது. இதே கருணையை 7 தமிழர்களிடமும் காட்டுவதற்கு எந்தத் தடையும் இருக்காது என்று நம்புகிறேன்.

எனவே, தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தில் பரிந்துரைத்துள்ளவாறு 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதற்காக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் தங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோதாவரி-காவிரி இணைப்பு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அத்தகைய அறிவிப்பு வெளியாகாதது தமிழக மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமராகிய தாங்கள் அடுத்தடுத்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், ஏதேனும் ஒரு பயணத்தின் போது இது குறித்த அறிவிப்பை சிறப்பு அறிவிப்பாக வெளியிட வேண்டும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் கைவிட வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அறிவிக்க வேண்டும்.

தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றையும், அக்கறையையும் நான் அறிவேன். அவற்றைப் போலவே தமிழ் நிலத்தின் பயன்பாடும், தமிழ் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

ஆகவே, தமிழகத்தின் நலன் கருதி மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி பிரதமராகிய தங்களை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிரதமருடனான சந்திப்பில் தமிழக நன்மைகளுக்கான இந்தக் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அதேசமயம், இந்தக் கோரிக்கைகள் வெறும் கண் துடைப்பு, மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கிலிருந்து அன்புமணியைக் காப்பாற்றவேண்டும், அடுத்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகள்தாம் உண்மையான கோரிக்கைகள் என்று பேசப்படுகிறது.

இவற்றில் எது உண்மை? என்பது நாட்டு மக்களுக்கு போகப்போகத் தெரியும் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response