
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது….
நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.அந்தத் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது.தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சில முன்மொழிவுகளை எங்கள் முன்வைத்தார்.
இந்த இயக்கம் திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இயக்கம்.இந்த 53 ஆண்டு காலமாக அக்கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வந்திருக்கிறோம்.இந்தச்சூழலில் எங்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்னவென்றால்,எந்த திமுகவை நாங்கள் எதிர்த்து வந்தோமோ அந்த திமுக ஆதரவோடு, தன்னை முதல்வராகத் தேர்வு செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்,அதற்கு நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சம்மதிக்கவில்லை.
நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்குள்ளானோம்.அப்படி திமுக உடன் இணைந்தால் அதிமுகவே இல்லாமல் போய்விடும் என்று சொன்னோம்.ஆனால்,அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில்அதிமுக படுதோல்வி அடைந்திருக்கிறது.அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.நாங்கள் யாரையும் குறை கூறவில்லை.
அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை.தேர்தலுக்கு முன்பு இருந்த எந்தக் கூட்டணியிலும் இனி அதிமுக இருக்காது.இந்தக்கட்சி காப்பாற்றப்பட வேண்டும்.புதியகூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.அந்தத் தீர்மானத்தின்படி,தற்போது வெற்றி பெற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்கலாம் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்துள்ளோம். கொறடாவாக சி.விஜயபாஸ்கர், சட்டமன்றக் குழு துணைத் தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்
இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அதிமுக மீண்டும் பிளவுபட்டிருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.


