
தில்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது,சாலையில் நின்ற மகிழுந்து ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அருகே நின்றிருந்த சில மகிழுந்துகளிலும் தீப்பிடித்தது. இதில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா கூறும்போது, “மாலை 6.52 மணி அளவில் செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோயில்களுக்கு அருகே மெதுவாக சென்ற மகிழுந்து ஒன்று சிக்னலில் நின்றுள்ளது. அப்போது அந்த மகிழுந்து வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அருகே இருந்த மகிழுந்துகள் 150 மீட்டர் தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டன.இதுதொடர்பாக தில்லி காவல்துறை, என்ஐஏ, என்எஸ்ஜி ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, தில்லி காவல்துறையினரும், தீயணைப்புப் படை வீரர்களும் விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடை நடத்தி வரும் ஒருவர் கூறும்போது, ‘‘பயங்கர சத்தத்துடன் கார்கள் வெடித்துச் சிதறி தூக்கிவீசப்பட்டன. பல கி.மீ. தூரம் சத்தம் கேட்டது. கடையில் இருந்த நான் அதிர்வு காரணமாக கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார்.
அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பை சேர்ந்த ராஜ்தர் பாண்டே கூறும்போது, “எனது வீடுவரை வெடிப்பின் அதிர்வை உணர முடிந்தது. அந்தப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது’’ என்று தெரிவித்தார்.
தில்லி காவல்துறையினர் கூறும்போது, ‘‘காரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே கார்கள் வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவரும்’’ என்று தெரிவித்தனர்.
எனினும், சதிச் செயலாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தால் தில்லி முழுவதும் உச்சபட்ச உசார் நிலை பிறப்பிக்கப்பட்டது. அனைத்துப் பகுதிகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தில்லியில் நேற்று இரவு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி,முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். பின்னர், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்திய அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.தில்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சாவையும் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷா கூறும்போது, “டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் அருகே கார் வெடித்துச் சிதறி உள்ளது. இதில் அருகே காரில் சென்றவர்கள், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்குள் தில்லி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றுவிட்டனர். அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘தில்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ‘தில்லி குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். தில்லியில் இருந்து வரும் காட்சிகள் இதயத்தை நொறுக்குகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு நிகழ்வால் தில்லி ம்க்கள் கடும்அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.


