தமிழீழ தேசியத் தலைவர் பிறந்தநாள் – சீமான் அழைப்பு

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களீன் 71 ஆவது பிறந்தநாள் நவம்பர் 26 அன்று உலகெங்கும் கொண்டாடப்படவிருக்கிறது. அதையொட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை….

மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமானப் பணியாற்றிடுவோம்!

அன்பின் உறவுகளுக்கு,
வணக்கம்!

தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லாத் தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71 ஆம் ஆண்டு பிறந்தநாளான 26-11-2025 அன்று,உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.

தலைவர் பிறந்த நாளினை, தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி, இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற கார்த்திகை 10ஆம் நாள் 26-11-2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ஏபிசா திருமண மண்டபத்தில் கொண்டாடப்படவிருக்கும் தமிழர் எழுச்சி நாள் விழாவில், குருதிக்கொடைப் பாசறை சார்பில் மாபெரும் குருதிக்கொடை முகாம் முன்னெடுக்கப்படவிருக்கிறது.

அதேபோன்று, குருதிக்கொடைப் பாசறை ஒவ்வொரு ஆண்டும் தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் முகாம்களில் இவ்வாண்டும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்.

அதேபோன்று, தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் ஈகத்தைப் போற்றும் மாவீரர் நாளன்று (27-11-2025) முன்னெடுக்கப்படும் குருதிக்கொடை முகாம்களிலும், நம் குருதியைக் கொடையாகத் தந்து மக்கள் உயிர் காத்து, நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்.

மாவீரர் சிந்திய குருதி! ஈழம் வெல்வது உறுதி!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response