மே 7,2025 அன்று பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலையும் தடுத்து நிறுத்தியது. அடுத்தடுத்து இந்தியா நடத்திய தாக்குதல்களில் பாகிஸ்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது. இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், உலக நாடுகள் மூலம் போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விட்டார். அமெரிக்க துணை அதிபர் மற்றும் அதிகாரிகளின் தொடர் முயற்சி காரணமாக இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.
போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் வெளியிட்டது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்திய ஒன்றிய மக்களும் இதை ஆரோக்கியமாகப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. போரில் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்த இந்தியா, போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை முறைப்படி வெளியிட்டிருக்க வேண்டும் என்ற கருத்து இந்திய மக்களிடம் மேலோங்கி உள்ளது.இந்தியாவை டிரம்ப் கிள்ளுக் கீரையாக டிரம்ப் நினைத்துவிட்டாரா? பிரதமர் மோடி இதை அனுமதித்திருக்கக் கூடாது என்கிற கருத்துகள் வெளியாகின.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ ஆகியோர் கடந்த 48 மணி நேரமாக பிரதமர் மோடி, பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாக். ராணுவ தளபதி அசிம் முனீர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் அசிம் மாலிக் ஆகியோருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் போர் நிறுத்தம் செய்வது என்று முடிவானது. இந்தியா- பாகிஸ்தான் போரில் எங்கள் வேலையில் ஒன்றுமில்லை என்று நேற்று முன்தினம் தான் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார். ஆனால் நேற்று நாங்கள் இருநாடுகளிடமும் நடத்திய நீண்ட இரவு பேச்சால் தான் போர் முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார். அவர் கூறும்போது, “போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். அதேநேரத்தில், இந்த போர் நிறுத்த அறிவிப்பு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே வந்திருந்தால், நாம் கண்ட இரத்தக் களரியும், இழந்த விலைமதிப்பற்ற உயிர்களும் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.