
இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று 9 ஆவது நாளாக போர் நீடித்தது. ஆரம்பம் முதலே ஈரானின் அணு சக்தித் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்படி, ஈரானின் இஸ்பஹான் அணு சக்தித் தளத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தின. இதில் அந்த அணு சக்தி தளம் மிகக் கடுமையாக சேதமடைந்தது என்று சொல்லப்படுகிறது.
இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 இராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே இந்தப் போரில் அமெரிக்காவும் இறங்கியுள்ளது.
ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது….
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். இப்போது அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன. முதன்மைத் தளமான ஃபோர்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டன.
அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக வீடு திரும்புகின்றன. எங்கள் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம். இந்த விசயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களை நடத்த 2பி2 பாம்பர் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இந்தக் குண்டுகளை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலும் ஈரானுக்குமிடையிலான போரில் அமெரிக்கா நேரடியாக இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறது.இதனால் ஈரானுக்கு ஆதரவாக வேறுநாடுகள் போர்க்களத்துக்கு வருமென்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தச் செயலால் மூன்றாவது உலகப்போர் மூண்டிருப்பதாகவும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மாந்த நேயர்கள் கவலை கொள்கின்றனர்.


