இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14,2024 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் தேர்தல் பரப்புரைகள் ஆகியன நடந்து வருகின்றன.
இந்நிலையில்,இத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல்கட்சிகள் தத்தம் தேர்தல் அறிக்கைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்கி அறிக்கை தயாரிக்கவேண்டுமெனவும் அவ்வாறு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவ்வியக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில்….
உலகம் இன்று எதிர்நோக்கும் தலையாய பிரச்சினைகளில் காலநிலை மாற்றமும், இதர சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் முதலிடத்தில் உள்ளன.நாடுகளில் நிலவும் வளப்பற்றாக் குறைவு, வறுமை,பஞ்சம்,பட்டினி போன்றனவற்றின் அடிப்படைக் காரணங்களாகவும் இவை உள்ளன.
காலநிலை மாற்றங்களுக்கும் ஏனைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கும் நாடு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாகத் திட்டங்களை வகுக்கவும், அவற்றை நிறைவேற்றவும் வேண்டிய கடப்பாடு அரசாங்கங்களுக்கே உரியதாகும். இவை தொடர்பாக ஏற்கனவே உலக நாடுகள் பலவும் விழிப்புணர்வு பெற்று வினைத்திறனுடன் செயலாற்றத் தொடங்கியுள்ளன.
இலங்கையும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது.
இலங்கையின் நாளைய அரசாங்கத்தை இன்று தேர்தலில் ஈடுபடும் கட்சிகளே அமைக்கப் போகின்றன.அந்த வகையில்,தேர்தல்களை நடாத்துகின்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் கட்சிகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டிய கடப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளைத் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல்கள் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு, தேர்தல் பொதுக்கூட்டங்களில் பிளாஸ்ரிக் கொடிகளையும், ஒருநாள் பாவித்து விட்டு வீசும் பிளாஸ்ரிக் குவளைகளையும் அறவே தவிர்க்குமாறு இறுக்கமாக அறிவுறுத்த வேண்டுமென்றும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பாக ஓர் அரசியல்கட்சி விழிப்புணர்வுடன் செயல்படுவதும் அக்கட்சி மற்ற கட்சிகளையும் அதைநோக்கி மடைமாற்றி வலியுறுத்த களத்தில் இறங்கியிருப்பதும் வரவேற்றுப் போற்றுதலுக்குரியது என்று அரசியல் நோக்கர்களும் மக்களும் கூறுகின்றனர்.