தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3 ஆம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதிக்குள் நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் விடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்ரல் 10, 12 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22, 23 ஆம் தேதிகளுக்குத் தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வந்தது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
அதில்,
1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைகிறது. அவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் கோடை விடுமுறையாகும். அதேபோல், 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 21 ஆம் தேதிவரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகள் நிமித்தம் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப்ரல் 22, 23 ஆம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். தொடர்ந்து ஏப்ரல் 24 இல் தொடங்கி கோடை விடுமுறை தரப்படும்.பள்ளித் திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்ரல் 26 ஆம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.