அரையாண்டுத்தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரேவினாத்தாள் முறையில் அரையாண்டு மற்றும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அரையாண்டு மற்றும் 2 ஆம் பருவத் தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வி துறை கடந்த மாதம் வெளியிட்டது. அதில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7 ஆம் தேதியும், மற்ற வகுப்புகளுக்கு டிசம்பர் 11 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 4 மாவட்டங்களுக்கும் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.

இதையடுத்து, டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று (டிசம்பர் 11) தொடங்கி நடக்க இருந்தன. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால், மாணவர்கள் நலன் கருதி அரையாண்டுத் தேர்வு தேதியை 2 ஆவது முறையாக மீண்டும் மாற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்….

பாடப்புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்குப் படித்துத் தயாராக முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 11 இல் (இன்று) தொடங்க உள்ள தேர்வுகளை டிசம்பர் 13 ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அதை ஏற்று, 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான புதிய தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்டது.

அதன்விவரம்….

மாநில பாடத் திட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13 முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இடையே டிசம்பர் 16, 17 (சனி, ஞாயிறு) தேதிகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தேர்வுகள் நடைபெறும்.

1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு காலை 10.30 – 12.30 மணி,
6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு காலை 10 – 12 மணி,
11 ஆம் வகுப்புக்கு காலை 9.30 – 12.45 மணி,
12 ஆம் வகுப்புக்கு மதியம் 1.15 -4.30 மணி

என தேர்வுகள் நடைபெறும்.

டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும். பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்படக்கூடும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response