சென்னையில் தாறுமாறாக அதிகரித்த காற்றுமாசு – தீபாவளி பட்டாசு விபரீதம்

தீபாவளிப் பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை உச்சநீமன்ற உத்தரவுப்படி சென்னை காவல்துறை கூறியிருந்தது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதே சமயம் நேற்று காலை முதலே சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்பட்டது.அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கியதை அடுத்து சென்னையில் காற்று மாசு மேலும் அதிகரித்தது. சென்னையின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது.

சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 322 என்ற தரக் குறியீட்டைத் தாண்டி மிக மோசமான அளவில் காற்று மாசு உள்ளதாகவும், வேளச்சேரி 308, அரும்பாக்கத்தில் 256, ஆலந்தூர் 256, இராயபுரம் 232 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது;

சென்னை அசோக் நகர் ஸ்ரீதேவி காலனியில் -147, கொடுங்கையூர் பகுதியில் – 150 என்ற அளவைத் தாண்டிச் சென்றது. சென்னையின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். கும்மிடிப்பூண்டி 241, வேலூரில் 230, கடலூரில் 213 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது

காற்று மாசு காரணமாக சுவாசப் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 101-200 என்ற மிதமான காற்று மாசுவினால் ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம் என்றும் 201-300 அளவிலான மோசமான காற்று மாசுவினால் நீண்டநேரம் வெளியில் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல், இதய நோய் உள்ளவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Response