கர்நாடகாவில் காங்கிரசு ஆட்சி – அடுத்தடுத்து வரும் கருத்துக்கணிப்புகளில் தகவல்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பிரதமர் மோடி வருகிற 29 ஆம் தேதி முதல் தனது பரப்புரையைத் தொடங்க உள்ளார். அகில இந்திய காங்கிரசுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏற்கனவே பரப்புரையைத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளில் காங்கிரசுக் கட்சியே வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பிரபலமான ஒரு கன்னட செய்தி தொலைக்காட்சி ‘சி.ஓட்டர்’ நிறுவனத்துடன் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தி அதன விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் காங்கிரசுக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதாவது மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரசுக் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்,தற்போது ஆளும் பா.சனதா 79 முதல் 89 தொகுதிகளிலும், சனதா தளம் (எஸ்) கட்சி 24 முதல் 34 தொகுதிகளிலும், பிறர் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்து வரும் கருத்துக் கணிப்புகளில் காங்கிரசே வெற்றி பெறும் என்று தகவல் வருவதால் அக்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Response