தப்பிப் பிழைத்தாரா ஆர்.என்.இரவி? – என்ன நடந்தது?

2023 சனவரி 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.இரவி, பல பகுதிகளைப் படிக்காமல் தவிர்த்தார்.அதனால், அன்றைய கூட்டத்தின் இறுதியில் அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து, அது நிறைவேற்றப்பட்டது.இதனால் ஆளுநர் ஆர்.என்.இரவி, கூட்டம் முடியும் முன்பே வெளியேறினார்.

இது மரபு மீறிய செயல் என்று கண்டனக் குரல் வலுத்தது.இந்த நிலையில் சனவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் இரகுபதி தலைமையில், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.இராசா, என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோர் தில்லியில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து ஆளுநர் மீது புகார் கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை வழங்கினார்கள்.

அந்தக் கடிதத்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உள்துறைக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே,ஆளுநர் ஆர்.என்.இரவி தில்லிக்கு சனவரி 13 ஆம் தேதி சென்றார். அங்கு, அவர் யாரையும் சந்திக்காமல் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், நேற்று திடீரென ஆளுநர் ஆர்.என்.இரவி, மீண்டும் தில்லி பயணம் மேற்கொண்டார். அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில்,தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…..

சனவரி 4 ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த ‘காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பைக் கொண்டாடும்’ ஒரு மாத காசி – தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வத் தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் வரலாற்று பண்பாடு பற்றி பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள், விவாதப் பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை ‘தமிழ்நாடு’ என்ற சொல்லைத் தவிர்த்து வந்த ஆளுநர், நேற்று தமிழ்நாடு என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கினார். அவரது செய்திக்குறிப்பின் தொடக்கத்தில், ‘ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், தமிழ்நாடு ஆளுநர் என்றே அவரது பெயருக்கு முன்னால் போடப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டை தமிழகம் என்றழைக்க வேண்டும் என்ற ஆளுநரின் கருத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் ஆர்.என்.இரவிக்கு மட்டுமின்றி அவரை இயக்கும் பாஜகவுக்கும் பெரும் கெட்ட பெயர். அதை மாற்ற அவரை தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து நீக்க பாஜக மேலிடம் திட்டமிட்டதாகச் சொல்லப்பட்டது.

அதற்கு, நீங்கள் சொல்வதைத்தானே நான் செய்கிறேன், எதிர்ப்பு வந்ததும் என்னை மட்டும் பலிகடா ஆக்குவது நியாயமா? என ஆர்.என்.இரவி புலம்பியதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் அவரை நீக்காமல் விளக்க அறிக்கையோடு நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்து இந்த அறிக்கை வெளியானதாகச் சொல்கிறார்கள்.

இதனால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்கிற நிலையில் இருக்கிறாராம் ஆர்.என்.இரவி. ஆனால் இது தற்காலிக நிம்மதிதான் நிரந்தரமில்லை என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response