சிங்களர்களுக்கு நெருக்கடி தரும் ஐநா தீர்மானம் – இந்தியா நழுவல் அன்புமணி வருத்தம்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்துள்ளன.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51-ஆவது கூட்டத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து உள்ளிட்ட 10 உறுப்பினர் நாடுகளும், உறுப்பினர் அல்லாத 16 நாடுகளும் இணைந்து வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

இலங்கையில் சமாதானம், மனித உரிமைகள், பொறுப்புடைமை ஆகியவற்றை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானத்தில் மொத்தம் 19 அம்சங்கள் இடங்கள் பெற்றுள்ளன. முதல் இரு பத்திகளில் போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள வரைவு தீர்மானம், அடுத்த 5 பத்திகளில் போர்க்குற்ற விசாரணை குறித்த இலங்கையின் நிலையை விமர்சித்துள்ளது.

மீதமுள்ள 12 பத்திகளில் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுத்துச் செல்வது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ள ஆதாரங்களைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்; இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் குறித்து, இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளில் உரிய அதிகார வரம்பு கொண்ட அமைப்பால் நீதித்துறை விசாரணை மற்றும் பிற நடைமுறைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு இத்தீர்மானம் உதவும்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கொண்டு வந்துள்ள வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை தப்ப முடியாது என்ற நிலை உருவாகும்.

இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள், ஏதாவது ஒரு நாட்டின் நீதிமன்றத்தில் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்யத் திட்டம் வகுத்துச் செயல்படுத்திய கொடுங்கோலர்கள் தண்டிக்கப்படுவதையும் இந்தத் தீர்மானம் உறுதி செய்யும்.ஒன்றிய அரசு விரும்பினால் இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவிலேயே கூட நடத்த முடியும்.

நேற்று நடந்த ஐநா மனித உரிமைப்பேரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில்,

இலங்கை போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்தை ஐநா மனித உரிமைப் பேரவை இன்று நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 20 நாடுகளும் எதிராக 7 நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டன.

இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியது தமிழர்களிடையே வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தீர்மானத்தை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response