சசிகலா தொடர்பில் எடப்பாடி பழனிச்சாமி – மாவட்டச்செயலாளர் தகவல்

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரும் பிளவுபட்ட நிலையில் ஒரு அணியினர் மீது மற்றொரு அணியினர் அவ்வப்போது பரபரப்பு குற்றச்சாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், பொன்னையன் இபிஎஸ் குறித்து பேசிய தகவல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அந்த ஒலிப்பதிவு வெளியான சில தினங்களிலேயே பொன்னையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு அவர் டம்மியாக்கப்பட்டார்.

அதே ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த கே.பி.முனுசாமி மீது பரபரப்புக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…..

ஓபிஎஸை விமர்சனம் செய்யும் வகையில் எடப்பாடியும், அவரது துதிபாடுபவர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். கட்சி தோல்விக்குக் காரணம் ஓபிஎஸ் எனக் கூறி வருகிறார்கள். கட்சியின் தோல்விக்கான காரணங்களை நான் தெரிவிக்கிறேன்.

அம்மாவை விடச் சிறப்பாக ஆட்சி செய்வதாக எடப்பாடியைப் பேசினார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி சி.வி.சண்முகத்திற்கு ராஜ்சபா எம்.பி பதவியைக் கொடுத்தார். ஓபிஎஸ் சாதாரண தொண்டரான தர்மருக்கு வாய்ப்பு கொடுத்தார். இவ்வாறு தொண்டர்கள் நலனுக்காகவும், கட்சி நலனுக்காகவும் தான் ஓபிஎஸ் அமைதியாக இருந்தார். தர்ம யுத்தம் நடந்து முடிந்த பிறகு திமுகவை வீழ்த்த வேண்டும் என இபிஎஸ் நினைக்கவில்லை. ஓபிஎஸ்-ஐ அழிக்கத்தான் பார்த்தார். இதற்காக அவர் போட்டியிட்ட தொகுதியில் ஓபிஎஸ் தோற்க வேண்டும் என்பதற்காக தங்கத்தமிழ்செல்வன் மூலமாக பணப்பட்டுவாடா செய்தார்கள்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் தென் மாவட்டங்களில் தோல்வியைச் சந்தித்தோம் இதற்கு முழுக் காரணம் இபிஎஸ் இதற்கு மூளையாகச் செயல்பட்டவர் கே.பி.முனுசாமி. ஆனால் அவர்கள் கொண்டு வந்த சட்டம் தற்போது பயனளிக்காமல் போய்விட்டது. ஆட்சியில் இருந்த போதே எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு கொள்ளை வழக்கைக் கண்டுபிடித்து இருக்க வேண்டும்.

அம்மா ஒரு கோவில் எனச் சொல்பவர்கள் ஆட்சியில் இருந்த போது ஏன் கொடநாடு கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. அதைப் பற்றி மட்டும் எடப்பாடி எப்போதும் பேச மாட்டார். ஓ.பி.எஸ் கட்சியில் இருப்பது கட்சிக்குப் பாரம் என கே.பி.முனுசாமி பேசுகிறார். ஓ.பி.எஸ் இல்லையென்றால் கே.பி.முனுசாமிக்கு விலாசம் என்பதே கிடையாது.

தீபா அரசியலுக்கு வந்தபோது, ஜெயலலிதாவை ஜாதி ரீதியாக கொச்சைப்படுத்தி கே.பி.முனுசாமி என்னிடம் பேசினார். கட்சியின் நலனுக்காக உட்கட்சி விவகாரங்களைப் பொது வெளியில் பேசாமல் இருந்தேன். தற்போது எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் குறித்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்கள். இதனால் பல்வேறு உண்மைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவியதே எடப்பாடி பழனிச்சாமி தான். எடப்பாடி கூறி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்தார். இதில் இருந்து சசிகலாவுடன் அப்போதில் இருந்தே தொடர்பில் இருந்தது எடப்பாடி தான். பதவி ஆசையால் அவர் அவ்வாறு செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response