அரசுப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மக்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது.இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. “பசிப்பிணி மருத்துவர்”- என்ற புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள காலை சிற்றுண்டித் திட்ட அரசாணையில், சர்.பிட்டி. தியாகராயர், காமராஜர், எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் ஆகியோர் இத்திட்டத்தை வளர்த்தெடுத்தது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆயிரத்து 145 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 1 இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர்கள் பயனடைவர் என்றும், மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் தொலை தூர மலைக் கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்படுவதாகவும், இதற்காக 33 கோடியே 56 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் படிப்படியாக தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி வழங்கப்பட உள்ள உணவுப் பட்டியலையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை உப்புமா வகைகள், செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள், புதன்கிழமை பொங்கல் வகைகள், வியாழக்கிழமை உப்புமா வகைகள், வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு வகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Leave a Response