ஆஸ்திரேலிய மட்டைப்பந்துவீரர் ஷேன்வார்னே திடீர் மறைவு – அரசுமரியாதையுடன் இறுதிச்சடங்கு

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று திடீரென மரணம் அடைந்தார்.
ஆஸ்திரேலிய மட்டைப்பந்து அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்னே ஓய்வுக்குப் பிறகு வர்ணனையாளராகப் பணியாற்றியதுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்.

52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று பிணமாகக் கிடந்தார். அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க மருத்துவர்கள் எடுத்த முயற்சிக்குப் பலன் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாகத் தெரிகிறது.

வார்னேவின் மரணத்தை அவரது தனிப்பட்ட விசயங்களை நிர்வகித்து வரும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஷேன் வார்னே 145 ஐந்துநாள் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எனும் என்கிற சாதனை படைத்தவர் ஷேன் வார்னே.

உலகம் முழுவதும் அவருடைய விளையாட்டுக்கு நிறைய இரசிகர்கள் உண்டு. இந்திய ஒன்றியத்திலும் குறிப்பாகத் தமிழகத்திலும் அவருக்கு ஏராளமான இரசிகர்கள் உண்டு. அவருடைய திடீர் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னேவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Response