சுற்றுச்சூழல் வாழ்வாதாரம் காக்க 75 நாட்களாகப் போராடும் மக்கள் – கண்டுகொள்ளாத கட்சிகள்

திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலையில் இருந்து விலகி, இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பாலியப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உள்ளதாகவும், இதற்காகப் பல நூறு ஏக்கர் வேளாண் நிலங்களும், ஏராளமான வீடுகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் கிடைத்த தகவலை அடுத்து இந்த திட்டத்தை எதிர்த்து ஊர் மக்கள் 75 நாட்களாகப் போராடிவருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலியப்பட்டு, புதிய காலணி, அருந்ததியர் பகுதி, சின்ன புனல்காடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர், செல்வபுரம், வாணியம்பாடி ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள அந்த கிராமங்களின் விவசாய நிலங்களில் பூ, காய்கறிகள், பழங்கள், நெல், மணிலா, கரும்பு மற்றும் சிறுதானியங்களை சாகுபடி செய்து வருகிறார்கள். கால்நடைகள் வளர்ப்பும் முக்கியமானதாக இருக்கிறது.

இந்நிலையில், அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றி சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்க தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. இதற்காக, வருவாய்த் துறை மூலமாக நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தையும், எங்களது வாழ்வாதாரத்தையும் அழித்து சிப்காட் கொண்டு வரும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். இயற்கை வளங்கள், விளை நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை அழித்து கொண்டு வரப்படவுள்ள சிப்காட் எங்களுக்குத் தேவையில்லை.

தொழிற்சாலைக் கழிவுகளில் திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீராதாரம் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஐரோப்பா உட்பட பல பகுதியில் இருந்து இனப் பெருக்கத்துக்கு பறவைகள் வந்து செல்லும் வலசை பாதையும் பாதிக்கப்படும்.

கவுத்தி – வேடியப்பன் மலையில் உள்ள வன விலங்கள், மூலிகைத் தாவரங்கள் மற்றும் அங்கிருந்து நீரோடைகள் அழிந்துபோகும். பெரும் முதலாளிகளுக்காக பூர்வகுடிகளாக உள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம். அரசு மற்றும் தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்

இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இன்று, சிப்காட் நிலயெடுப்பிற்கு எதிரான 75 ஆம் நாள் கிரிவலப்பாதையில் மலை சுற்றும் போராட்டத்தை அம்மக்கள் நடத்தினர்.

தொடக்கம் முதல் இப்போராட்டத்துக்கு முழு ஆதரவு கொடுத்து வரும் திரைப்பட இயக்குநர் லெனின்பாரதி, இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

தமிழக முதல்வர், தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ட்விட்டரில் அவர் பதிவிட்டு வருகிறார். ஆனால் அவர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை.

ஆட்சியாளர்கள் மட்டுமின்றி பொதுவுடைமைக்கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இப்போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக வேதனையுடன் பதிவிட்டு வருகிறார் இயக்குநர் லெனின்பாரதி.

Leave a Response