காரில் தப்பிய இராஜேந்திரபாலாஜி – விரட்டிப் பிடித்துக் கைது செய்த காவல்துறை

அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையைத் திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 இலட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் இராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இராஜேந்திர பாலாஜி முன்பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் டிசம்பர் 17,2021 ஆம் தேதி முதல் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர்.

கோவை, மதுரை, தென்காசி, பெங்களூரூ மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று அவரைத் தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு இருப்பதாக மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் இராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கைது செய்தனர்.காவல்துறையினர் வாகனத்தைக் கண்டதும் காரில் ஏறித் தப்பிச்செல்ல முயன்றாராம் இராஜேந்திரபாலாஜி. உடனே அவரது காரை விரட்டிச் சென்று மடக்கிக் கைது செய்யப்பட்டார் என்கிறார்கள்.

அவரை அங்கேயே நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி அங்கு ஆணை பெற்று தமிழகம் அழைத்துவருவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response