கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக அதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? மற்றும் யாரெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும்? என்பது குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
உலகின் பல நாடுகளில் பரவி வருகின்ற ஒமைக்ரான் பாதிப்பு இந்திய ஒன்றியத்திலும் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில், 130க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்தடுத்து தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.
இதுபற்றி சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில்,
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில், மிதமான அறிகுறி, பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்.
மருத்துவரின் பரிந்துரைப்படி, ‘பாராசிட்டமால்’, ‘போலிக்’ ஆசிட் மாத்திரை, பத்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். படுக்கையில், குப்புறப்படுத்துக் கொள்வதும், அதிக தண்ணீர் அருந்தும் அவசியம். இரத்த ஆக்சிஜன் அளவை ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டர்’ கொண்டு, ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். இரத்த ஆக்சிஜன் அளவு, 92 ஆக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்தாத, இணை நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு தெரிய வந்தால், உடனடியாக கண்காணிப்பு மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது அவசியம். தடுப்பூசி செலுத்தி விட்டு, இணைநோய் எதுவுமில்லாதவர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
வீடுகளில் தனிமைப்படுத்துவோர் மருத்துவர் அறிவுரையைப் பின்பற்றி, தக்க மருந்து, மாத்திரை உட்கொண்டு, ஓய்வில் இருப்பது மிகவும் அவசியம். அறிகுறி வந்து, பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், ஆக்சிஜன் தேவைப்படுவோர், இணைநோய் உள்ளவர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், 60 வயதுக்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் கட்டாயம் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.