இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மோடிக்குக் காது கேட்காதா?

தமிழ்நாடு அரசின் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் 2 ஆவது வாரத்தில் சற்று குறைந்து இருந்தது.ஆனால் அது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் அச்சம் அடையச் செய்யும் அளவுக்கு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தில் பயணிக்கத் தொடங்கியது.

அந்த வகையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பார

பெட்ரோலை பொறுத்தவரையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் விலை குறைந்த நேரத்தில் ஒரு லிட்டர் ரூ.100-க்கு கீழ் சென்று, விலை உயரத்தொடங்கியதும் மீண்டும் ரூ.100-ஐ கடந்து, தற்போது ஒரு லிட்டர் ரூ.104 என்ற விலையில் விற்பனை ஆகிறது. அதேபோல், டீசல் விலை பெட்ரோலை விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தினமும் பெட்ரோலை காட்டிலும் டீசல் விலை உயர்வுதான் அதிகமாக இருக்கிறது.

அதன்படி, நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் 103 ரூபாய் 92 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 30 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 104 ரூபாய் 22 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலையை பார்க்கையில், நேற்று முன்தினம் 99 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதன் விலையில் லிட்டருக்கு 33 காசு உயர்ந்து, 100 ரூபாய் 25 காசுக்கு விற்பனை ஆனது.

இந்த விலை உயர்வு மூலம் பெட்ரோலை போல டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.80-க்கு விற்பனையான டீசல், கடந்த 10 மாதங்களில் லிட்டருக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. அதிலும் இம்மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மட்டும் லிட்டருக்கு ரூ.5 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் ஏறுமுகம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே ஒரு லிட்டர் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் நேற்றைய விலை உயர்வு மூலம் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் டீசல் விலை சதம் அடித்துவிட்டது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.104.52 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்பட பல தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

அவை எதுவும் மோடி காதில் விழவே இல்லை.

Leave a Response